Saturday, December 5, 2009
ஷெர்லக் ஹோம்ஸ்
ஒரு தவறான தகவலுக்கு மறுப்பு
சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அப்புத்தகம் ஆங்கிலத்தில் Arthur Conan Doyle என்ற மருத்துவர் எழுதியது. அதை பத்ரி சேஷாத்ரி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அப்புத்தக அறிமுக பகுதியில் (பக்கம் 8-9) கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
"ஆர்தர் கோனன் டாயில் என்ற ஸ்காட்லாந்துகாரர், மருத்துவம் படித்தவர். மருத்துவராக பணியாற்றவும் செய்தார். ஆனால், அதில் அவருக்கு பெரிய திறமை இருந்திருக்க முடியாது. பெரிதாக சம்பதிக்கவுமில்லை. ஓய்வு நேரத்தில் அவர் இந்தக் கதைகளை எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்".
இந்த கருத்து Arthur Conan Doyle வாழ்க்கை வரலாறு பற்றி சரியாக தெரியாமல் எழுதபட்டிருக்கவேண்டும். ஒரு திறமையான மருத்துவருக்கு மிகவும் தேவையான நுட்பமாக கூர்ந்து கவனிக்கும் திறன் மிக அதிகமாக இருந்ததால்தான், Arthur Conan Doyle -யால் சிறந்த துப்பறியும் நாவல் எழுத முடிந்தது.
அவர் எடின்பர்க் மருத்துவ கல்லூரியில் படித்துகொண்டிருந்த போது, ஒரு நாள் டாக்டர் ஜோசப் பெல் (Dr. Joseph Bell) என்ற பேராசிரியர் மருத்துவமனையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
டாக்டர் ஜோசப் பெல், நோயாளிகள் உள்ளே வரும்போதே அவர்களை கூர்ந்து நோக்கி, அவர்களுடைய தொழில், முந்தைய கால வரலாறு போன்றவற்றை அவர்களை கேட்டறியாமலே, மிக சரியாக சொல்லும் திறன் பெற்றவர்.
அப்போது ஒரு நோயாளி, மருத்துவரை பார்க்க வந்தார். டாக்டர் ஜோசப் பெல், அந்நோயாளியை நோக்கி கேட்டார்
.
நீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிதானே?
ஆம்.
உங்களுக்கு இடது கை பழக்கம் உள்ளதல்லவா?
ஆம்
சிறிது நேரம் காத்திருங்கள். மாணவர்களுக்கு பாடத்தை முடித்துவிட்டு வருகிறேன்.
என்றார்.
நோயாளி சென்று அமர்ந்தார்.
ஒரு மாணவனாக அங்கிருந்த Arthur Conan Doyle தமது ஆசிரியரான ஜோசப் பெல்லை பார்த்து,
இவரை உங்களுக்கு முன்பே தெரியுமா? என்று கேட்டார்.
நான் இவரை இதற்கு முன் பார்த்தது கூட இல்லை என்றார் பெல்.
இதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த Arthur Conan Doyle ,
பின் எப்படி அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதையும், அவருக்கு இடது கை பழக்கம் உண்டு என்பதையும் சொன்னீர்கள்
என்று கேட்டார்.
அதற்கு,
எந்த ஒரு நோயாளியையும் மருத்துவர் கூர்மையாக கவனித்தால், நோயாளி பற்றிய எல்லா விவரங்களையும் கூற முடியும்
என்று சொன்ன ஜோசப் பெல்
'Keen observation is the prime importance in Clinical Medicine' என்பது உனக்கு தெரியுமா?
என்று கேட்டுவிட்டு, தன்னால் எவ்வாறு கூற முடிந்தது என்று விளக்கினார்.
அந்நோயாளி, அணிந்துள்ள அரைக்கால் சட்டையில் இடது பக்க தொடை பகுதி மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. ஆனால், சாதாரணமாக ஒரு மனிதனின் அரைக்கால் சட்டையில் உட்காரும் (புட்டம்) பகுதியில்தான் இரு பக்கமும் தேய்மானம் காரணமாக நைந்து, கிழிந்து இருக்கும். இவருக்கு ஒரு தொடையில் மட்டும் நைந்து கிழிந்து இருப்பதால், இவர் ஒரு தொடையை மட்டும் கீழே வைத்து, மற்றொரு காலை மடக்கி நிறுத்தி வைத்து வேலை செய்யும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருக்கவேண்டும். எல்லா செருப்பு தைக்கும் தொழிலாளிகளும் வலது தொடையை தரையில் வைத்து, இடது காலை மடக்கி நிறுத்தியும், வலது கையில் தோலை அடித்தும் தைப்பார்கள். இவர் இடது கை பழக்கம் உடையவராக இருப்பதால், இடது தொடையை மட்டும் தரையில் வைத்து வேலை செய்வதால், அவருடைய அரைக்கால் சட்டையில் இடது பக்கம் மட்டும் தேய்மானத்தால் கிழிந்துள்ளது. இதை கண்டறிந்து சொல்வதில் என்ன கடினம் இருக்கிறது?
என்றார் ஜோசப் பெல்.
அப்போது ஒரு மாணவன், தன்னுடைய பாக்கெட் வாட்சை (கை கடிகாரம் அல்ல) ஆசிரியரான ஜோசப் பெல் வசம் கொடுத்து,
இதை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா சார்?
என்றான்.
ஆசிரியரான ஜோசப் பெல் அந்த பாக்கெட் வாட்சை கூர்ந்து கவனித்தார். பிறகு அந்த மாணவனை நோக்கி
இந்த கடிகாரம் உன் தந்தையுடையது. நீ அவருக்கு இரண்டாவது மகனாக இருக்க வேண்டும். உனது மூத்த சகோதரர், சமீபத்தில் குடி பழக்கம் காரணமாக, மூப்பு எய்தும் முன்பே இறந்திருக்க வேண்டும்
என்றார்.
அந்த மாணவன் தொடங்கி, வகுப்பில் இருந்த அனைவருமே, ஆச்சரியத்தில் மூழ்கினர்.
காரணம், ஆசிரியரான ஜோசப் பெல் கூறியது, முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை.
உடனே, Arthur Conan Doyle
எப்படி உங்களால் இவ்வளவு சரியாக கூற முடிந்தது என்று கேட்க,
அதற்கு டாக்டர் பெல்
அதுதான் ஒரு சிறந்த மருத்துவனுடைய திறமை
என்று கூறி, தன்னால் எப்படி மேற்கண்ட விவரங்களை சொல்ல முடிந்தது என்று விவரிக்க ஆரம்பித்தார்.
இக்கடிகாரத்தில், கடிகாரம் உற்பத்தி செய்த வருடம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பது உள்ளது. ஆகையால் இது புதிதாக வாங்கபட்டதல்ல. இது அவனுடைய தந்தை வாங்கியதாக இருக்கவேண்டும். இந்த மாணவன் தந்தை இல்லாதவன் என்பது இவனது கல்லூரி ரெக்கார்டுகளை நான் முன்பே பார்த்ததால் எனக்கு தெரியும். கடந்த வாரம் வரை, இவன் இந்த பாக்கெட் வாட்ச்சை அணிந்து வரவில்லை. கடந்த வாரம் இவன் சிறப்பு விடுப்பில் சென்று திரும்பினான். அதன் பிறகே இவன் சட்டையில் இந்த வாட்ச் இருந்தது. நம் நாட்டு சட்டப்படி, தந்தையின் பொருட்கள் மூத்த மகனுக்கு மட்டுமே சொந்தமாகும். முதல் மகன் இறந்தால்தான், இரண்டாம் மகன் அவற்றை பெற முடியும். ஆகையால்தான், போன வாரம் இவன் அண்ணன் இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன். இந்த வாட்ச்சை உன்னிப்பாக பார்த்தபோது, அதில், பல வட்டி கடைகளின் குறியீடுகள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் மகனை படிக்க வைக்கும் குடும்பத்தினர், இது போல வாட்ச்சை அடகு வைக்கும் அளவுக்கு ஏழையாக இருக்க முடியாது. ஏதோ ஒரு அவசர தேவைக்கு மட்டுமே இது போல வாட்ச்சை அடகு வைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த வாட்ச் பல முறை அடகு வைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது போன்ற கெட்ட பழக்க வழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இது போன்று வாட்ச்சை அடகு வைப்பார்கள். இந்த கடிகாரத்தின் சாவி கொடுக்கும் பகுதியை கவனித்த போது, அது முறையற்ற வகையில் அடிக்கடி சாவி கொடுக்க பட்டதன் காரணமாக சரியான தேய்மானம் இல்லை. குடி போதையில் உள்ளவர்கள்தான் இது போன்று சாவி கொடுப்பார்கள். ஆகவே, இந்த வாட்ச்சை அணிந்தவன் ஒரு மொடா குடியனாக இருந்து, அதன் காரணமாக இளம் வயதிலேயே இறந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தேன்.
என்று கூறி முடித்தார்.
இதை கேட்ட Arthur Conan Doyle உட்பட அவ்வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும், கூர்ந்து நோக்கும் திறன் மருத்துவ தொழிலுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தனர். இதன் பிறகு, டாக்டர் பெல்லை தன ஆதர்ஷ புருஷனாக பாவித்த Arthur Conan Doyle, எதையும் நுட்பமுடன் கூர்ந்து நோக்கும் திறனை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்
தனது மருத்துவ படிப்பை முடித்த பிறகு ஒரு மருத்துவராக பணியாற்றினார் Arthur Conan Doyle.தன்னிடம் வரும் நோயாளிகளை கூர்ந்து கவனித்து, அவர்களை பற்றிய பல ரகஸ்யங்களை அறிந்து, சிறப்பான முறையில் மருத்துவம் செய்ததோடு, சில குற்றவாளிகளான நோயாளிகளை பற்றி போலீசுக்கு துப்பும் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு மருத்துவ தொழிலில் சிறிது தொய்வும் ஏற்பட்டது. அவருக்கு உலகம் சுற்றும் ஆர்வம் காரணமாக, அவரால் ஒரே இடத்தில் நிலையாக இருந்து மருத்துவம் செய்ய இயலவில்லை.
ஆரம்பத்தில் தன்னுடைய நண்பரான மருத்துவர் ஒருவருடன் இணைந்து மருத்துவ தொழில் செய்தார். ஆனால் அவருடைய நண்பர் மருத்துவ தொழில் தர்மத்தை மீறி, பல தவறான காரியங்களை ஈடு பட்டதால், அவருடன் கருத்துவேறுபாடு கொண்ட Arthur Conan Doyle அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் தனியாகவே ஒரு மருத்துவராகவே தொழில் புரிந்தார்.
ஆயினும், Arthur Conan Doyle அடிப்படையில் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்த காரணத்தால், மருத்துவ தொழிலைவிட எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அதற்கு காரணம் அவருடைய அம்மா.
அப்பெண்மணி நிறைய புத்தகங்கள் படிப்பதோடு, நன்றாக கதை சொல்லும் திறன் பெற்றவர். தன்னுடைய மகனான Arthur Conan Doyle -க்கு சிறு வயதிலிருந்தே நிறைய கதைகளை சொல்லி, கதை சொல்லும் ஆற்றலை தன் மகனுக்கும் ஊட்டி வளர்த்தார்.
Arthur Conan Doyle தன் பள்ளி வயதிலேயே, சிறு கதைகள் எழுதி, பல பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆயின. அவர் மருத்துவ கல்லூரியில் படித்தபோதும், தன் சம கால புகழ் பெற்ற பல எழுத்தாளர்களை சந்தித்து, தன் எழுத்து ஆர்வத்தை வளர்த்துகொண்டார்.
ஒரு திறமையான மருத்துவராக இருந்த போதும், தனது ஓய்வு நேரங்களில் கதைகளை எழுதிய அவர், எழுத்தில் கொண்ட ஆர்வம் காரணமாகவே, முழு நேர எழுத்தாளராக மாறினார். இடையில் சில காலம் அரசியல் மற்றும் பொது வாழ்விலும் ஈடுபட்டார். அவர் மருத்துவராக பணி புரிந்த காலத்திலும், பல பிரபல கொலை வழக்குகளில் துப்பறிவதற்காக அழைக்கப்பட்டு, வெற்றிகரமாக துப்பு துலக்கினார்.
மருத்துவ துறைக்கு தேவைப்படும் கூர்ந்து நோக்கும் திறன் பெற்றிருந்த காரணத்தால்தான் Arthur Conan Doyle அவர்களால் ஒரு சிறந்த துப்பறியும் நாவலாசிரியராக முடிந்தது. உண்மையில் மருத்துவ துறை Arthur Conan Doyle என்ற ஒரு சிறந்த மருத்துவரை இழந்தது என்றாலும், ஒரு உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நாவலாசிரியர் நமக்குக் கிடைத்தார்.
தன் கல்லூரி நாட்களில் தன்னை மிகவும் கவர்ந்த டாக்டர் பெல்லை நினைவில் வைத்தே அவர் ஷெர்லக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் நிபுணர் கதா பாத்திரத்தை படைத்தார். இதை அவர் டாக்டர் பெல்லுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"You are yourself Sherlock Holmes and well you know it,"
இவ்வளவு விஷயங்களை நான் எழுத காரணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம், இரு கொலைகள் என்ற புத்தகத்தின் அறிமுக பகுதியில் Arthur Conan Doyle ஒரு திறமையான மருத்துவராக இருந்திருக்க முடியாது என்று எழுதி இருப்பது சரியான மதிப்பீடு அல்ல என்பதை உணர்த்தவே.
ஒரு மருத்துவருக்கு கூர்ந்து நோக்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை, விகடன் வெளியிட்டுள்ள போ ஸ்ட்மார்டம் என்ற டாக்டர் சேதுராமன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்தாலே விளங்கும்.
உலக புகழ் பெற்ற மனிதர்களை பற்றி எழுதும்போது, தவறான தகவல்கள் இடம்பெறாது பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் உணரவேண்டும் என்பதே என் விருப்பம்.
Sunday, November 15, 2009
தொலைக்காட்சி நேர்காணல்
Thursday, November 5, 2009
திரும்பிப்பார்க்கிறேன்-8

புத்தக அறிவு எவ்வளவு இருந்தாலும், அனுபவ அறிவும் தேவை
-------------------------------------------------------------------------------------
அந்த மத்தின் தலையை தட்டி எடுத்துவிட்டு, தினந்தோறும் வெண்ணையில் பட்டு, நனைந்து கடினமான கைப்பிடியை மட்டும் தனியே எடுத்து, ஒரு முனையை கொடுவாளால் கூராக செதுக்கினார் (படம் -1).

படம் -1
அது கூர் சீவப்பட்ட பென்சில் போல ஆயிற்று. பின், வெளியே நீட்டிக்கொண்டிருந்த முன்னங்கால்களின் கணுக்காலில் குளம்பை சுற்றி ஒட்டி இருந்த தோல் பகுதியை Embryotomy knife (படம்.-2) மூலம் வெட்டி எடுக்குமாறு கூறினார். அவ்வாறு தோலை வெட்டிய உடன், அந்த வெட்டிய பகுதியில் கூராக்க பட்ட கைப்பிடியின் கூர்முனையை 45 டிகிரி சாய்வாக உள்நோக்கி வைத்து, ஒரு கட்டையில் தனது பலம் கொண்டமட்டும் அந்த கைப்பிடியின் மறுமுனையில் அடித்தார்.

படம் -2
அடித்த வேகத்தில் கணுக்காலில் இருந்து தோள் பட்டை வரை தோல் கிழிந்தது. மத்தின் கைப்பிடி எடுத்து, அதை கூர் சீவியதன் அர்த்தத்தை என்னால் அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அறுவை மருத்துவ முறைப்படி, இறந்த கன்றை வெட்டி எடுக்க உபயோகப்படும் உளியின் (Deburis Chisel)முனை ஒரு தலை கீழாக எழுதப்பட்ட 'ப' போல் கூராக இருக்கும். அடுத்த முனையில் கைப்பிடி இருக்கும். குளம்பை சுற்றி உள்ள தோலை சிறிது வெட்டி விட்டு அந்த உளியின் கூரான பகுதியை வெட்டி எடுத்த பகுதியில் வைத்து, கைப்பிடியை பிடித்து வேகமாக உள்நோக்கி அழுத்தினால் தோள்பட்டை வரை தோல் வெட்டப்படும்.(படம்-3)

அதற்குப்பின் அந்த காலை பிடித்து திருகினால், தோள்பட்டை வரை, உடலிலிருந்து பிரித்து சுலபமாக வெளியில் எடுத்து விடலாம். பின் அதுபோல் மறு முன்னங்காலையும் வெட்டி எடுத்து விடலாம். அவ்வாறு இரு முன்னங்கால்களையும் வெட்டி எடுத்து விட்டால், கையை கர்பப்பையில் விட்டு, இறந்த கன்றின் தலையை சுலபமாக நேர் செய்து வெளியே எடுத்துவிட முடியும்.
இந்த முறையில் இரு கால்களையும் வெட்டி எடுக்க அந்த கடினமான மர மத்தின் கை பிடியை கத்தியாக உபயோகித்து, இரண்டு கால்களையும் வெட்டி வெளியே எடுத்தேன். பிறகு சுலபமாக கர்ப்ப பையினுள் கையை விட்டு பார்த்த போதுதான், அந்த இறந்த கன்றின் தலை இடுப்பு எலும்புக்கு கீழே (Pelvic Bone) சென்று சிக்கி இருந்தது (படம்-4 & 4A) தெரிந்தது.
படம்-4
அப்பசு கன்று போட முடியாமல் தவிக்கும் போது, பிரசவ முறை பற்றி எந்த அறிவும் இல்லாத சில ஆட்கள், தலையை நேராக்காமல், வெளியே தெரிந்த இரண்டு கால்களை மட்டும் பிடித்து இழுத்ததால் தலை இடுப்பு எலும்புக்கு கீழ் சென்று சிக்கிக் கொண்டது.
அது தெரியாமல் இரண்டு நாட்களாக பலரும் காலை மட்டும் திரும்ப திரும்ப பிடித்து இழுத்ததால், கன்று மூச்சு திணறி கர்ப்ப பையினுள்ளேயே இறந்து, உப்பி விட்டது. அதனால் தான் கர்ப்ப பையில் கை விட்டு பரிசோதனை செய்ய கூட இடமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது.

படம்-4A
கன்றின் கால்களை வெட்டி எடுத்த உடன், தலையை நேர் செய்து, இடுப்பு எலும்புக்கு மேலே கொண்டு வந்து, கயிற்றை கட்டி மெதுவாக வெளியே எடுத்து, இறந்த கன்றை தாயிடமிருந்து பிரித்தேன். பிறகு, தேவையான மருத்துவம் செய்துவிட்டு, காலை ஆறு மணிக்குள் மறுபடியும் மாயவரம் வந்து சேர்ந்தேன்.
கிராமங்களில் கன்று போட முடியாமல், பிரசவ அவஸ்தை படும் கால்நடைகளுக்கு எல்லா கால்நடை மருத்துவர்களாலும், கன்றை வெளியே எடுத்து மருத்துவம் செய்ய முடியாது. நல்ல திடகாத்திரமான உடலும், எந்த நிலையிலும் தளராது நின்று வேலை செய்யும் திறமையும், நல்ல மனோ திடமும், சுற்றுப்புற சூழலை அனுசரித்து வேலை செய்யும் திறனும், ஆழ்ந்த மருத்துவ அறிவும் உள்ளவரால் மட்டுமே பிரசவ கேஸ்களை வெற்றிகரமாக மருத்துவம் செய்ய முடியும். அத்துடன், நல்ல திடகாத்திரமான, வலிமையுள்ள இரு உதவியாளர்களும், தக்க உபகரணங்களும் தேவை.
இந்த நிகழ்வு, எனக்கு இரண்டு முக்கிய பழமொழிகளை நினைவூட்டியது.
1. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
2. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
அத்துடன், எலும்பு கூடும், சதையும் இணைந்தால்தான், ஒரு முழு உருவம் தோன்றுவது போல, கல்லூரி புத்தக அறிவும், அனுபவ அறிவும், சேர்ந்தால்தான் ஒரு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவராக திகழ முடியும் (Bony theoretical knowledge must be covered with flesh of practice to become a full-fledged veterinarian) என்று உலக புகழ் பெற்ற கால்நடை மருத்துவரான ஜேம்ஸ் ஹேரியட் எழுதி உள்ளது என் நினைவிற்கு வந்தது.
என்னுடைய பணியாள் ஏழு வயது பையனாக வேலையில் சேர்ந்து, பல ஆண்டுகளாக பல கால்நடை மருத்துவர்களின் கீழ் வேலை செய்தபோது, ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் கடைபிடித்த பல புதிய உத்திகளை கூர்ந்து கவனித்து வந்ததால், அவரால் அன்று எனக்கும் உதவ முடிந்தது.
இந்நிகழ்வு, பின்னாட்களில் பல கடினமான பிரசவ கேசுகளை வெறறிகரமாக கையாள உதவியாக இருந்தது.
Wednesday, October 7, 2009
திரும்பிப்பார்க்கிறேன் - 7
அங்கு சென்றபின்தான், அந்த விவசாயி கூறியது போல, அந்த பசு அன்று மாலையிலிருந்துதான் கன்று ஈன முடியாமல் தவிக்கிறது என்பது பொய் என்று தெரிய வந்தது. அந்த பசு கடந்த இரண்டு நாட்களாக கன்று ஈன முடியாமல் தவிப்பதோடு, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சில நாட்டு வைத்தியர்கள் வந்து கன்றை வெளியே எடுக்க முயற்சித்து, அது முடியாமல் திரும்பி விட்டனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த கடுங்குளிர் இரவில், சட்டையை கழற்றிவிட்டு சுடுநீர் கிடைக்கததால், குளிர்ந்த நீரிலேயே கையை கழுவி, சோப்பு போட்டு, சிறிய லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்தபோது, திடுக்கிட்டேன். பசுவின் பிறப்பு உறுப்பினுள் என் சுண்டு விரல் நுழைய கூட இடமில்லை. கன்று இறந்து, அதன் கால்கள் உப்பி, பெருத்து இருந்தன. நாட்டு வைத்தியர்கள் முரட்டுத்தனமாக இழுத்ததால், இரண்டு முன்னங்கால்களும் கணுக்கால் வரை வெளியே நீட்டி கொண்டிருந்தன. தலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. .
இது போன்ற கேஸ்களில், கால்களை வெட்டி எடுத்தால்தான், கை உள்ளே நுழைய இடம் கிடைக்கும் என்று படித்துள்ளேன். அவ்வாறு வெட்டி எடுப்பதற்கு Subcutaneous fetotomy என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இவ்வாறு வெட்டி எடுக்க தேவையான உபகரணமான உளி (Deburis Chisel) மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட பெட்டி (Thygesen embryotome) தேவைப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த உபகரணம், கல்லுரியிலேயே கிடையாது. எனது கல்லூரி காலம் முடியும் தறுவாயில்தான், டென்மார்க் நாட்டுக்கு சென்று ஈனியல் மருத்துவத்தில் பயிற்சி பெற்று வந்த ஒரு விரிவுரையாளர், இந்த கருவிகளை உபயோகிப்பது எப்படி என்று கரும்பலகையில் படம் வரைந்து விளக்கியிருந்தார். அவருடைய முயற்சியால், இந்த கருவி மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சில முக்கிய மருத்துவமனைகளுக்கு மட்டும், அரசால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் மாயூரம் கால்நடை மருத்துவமனையும் ஒன்றாகும்.
நான் பொறுப்பேற்பதற்கு ஒரு மாதத்திற்குள் முன்தான், அந்த கருவி பெறப்பட்டு, பார்சல் வந்த சிப்பம் கூட உடைக்கப்படாமல் வைக்கபட்டிருந்தது. நான் பொறுப்பேற்கும்போது, மருத்துவமனை சாமான்களை சரி பார்க்கும்போதுதான், அந்த பெட்டியை பார்த்தேன். அதை அதுவரை யாரும் பிரித்துக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கும் அதை பயன்படுத்தும் முறை தெரியாது. இந்த பெட்டியின் உபயோகம் தெரியாததால், எனது பணியாள் அந்த பெட்டியை எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். திரும்பவும் மாயூரம் சென்று அந்த கருவியை எடுத்து வரவேண்டுமானால், அதற்குள் பொழுது விடிந்துவிடும். காலை பணிக்கு செல்ல முடியாது.
என்ன நீ இவ்வாறு செய்துவிட்டாய்? நீ எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்திருப்பாய் என நம்பி வந்தது எவ்வளவு தவறாக போய்விட்டது பார்? என்று எனது பணியாளை கடிந்துகொண்டேன்.
அதற்கு அந்த பணியாள் 'இல்லை அய்யா, நம்மிடமிருக்கும் கருவிகளை கொண்டே, கன்றை வெளியே எடுத்துவிடலாம்' என்று துணிவுடன் கூறினார். என்னுடைய புத்தக அறிவு, அந்த கருவியின்றி கன்றை வெளியே எடுக்க முடியாதே, என்ன செய்வது என்று யோசிக்க வைத்து.
ஆனால் எனது பணியாள் அந்த மாட்டின் சொந்த காரரை பார்த்து, 'மரத்தால் ஆன தயிர் கடையும் மத்தும் கூடவே ஒரு கொடுவாளும் உடனே வேணும். போய் எடுத்து வா' என்றார். மாட்டின் சொந்தகாரர் உடனே ஊருக்குள் சென்று, தயிர் கடையும் மர மத்து மற்றும் கொடுவாளுடன் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்தையும் கொடுவாளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தேன்.
- தொடரும்
Monday, September 21, 2009
திரும்பிப்பார்க்கிறேன் - 6
ஏழை விவசாயியின் தவிப்பையும், பணியாளரின் விருப்பையும் அறிந்த நான், தொலை தூரத்தில் உள்ள அக் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அவ்விவசாயியிடம் விசாரித்தபோது, மாலையில் மேய சென்ற பசு வயல் வெளியிலேயே கன்று போட முடியாமல் தவித்து, படுத்து கிடப்பதாகவும், கன்றின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதான் அப்பசுவுக்கு தலை பிரசவம் (முதல் பிரசவம்) என்றும் கூறினார்.
மேற்கண்ட விவரங்களை கேட்டறிந்த நான், அந்த கடுங்குளிர் இரவில், எனது பணியாளருடன், பதற்றத்துடன் மகிழ்வுந்தில் (காரில்) பயணித்தேன். எனது பதற்றத்துக்கு முக்கிய காரணம், எனது பணியில் நான் பார்க்கபோகும் முதல் பிரசவ கேஸ் இதுதான் என்பதே.
அது மட்டுமின்றி, எனது கல்லூரி பயிற்சி காலத்தில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில், பிரசவ வேதனையோடு மருத்துவ உதவி கேட்டு ஒரு பசு கூட கொண்டுவரப்படவில்லை.
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் நோயுற்ற குதிரைகளும், நாய்களுமே அதிகம் வரும். பார வண்டி இழுக்கும் ஒரு சில காளை மாடுகள் மட்டுமே கழுத்து புண், வயிறு உப்புசம் மற்றும் கொம்பு முறிவு போன்றவற்றுக்காக சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். பசுக்கள் மற்றும் எருமை மாடுகளின் வருகை மிகக் குறைவே. ஆகவே, அந்நாட்களில் பயின்ற கால்நடை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று, கால்நடை துறையில் பணியில் சேர்ந்த பிறகுதான் மாட்டின சிகிச்சையில் (Bovine practice) அனுபவம் பெற முடியும்.
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இப்போது இருப்பது போல, பெரிய பிராணிகள் மற்றும் சிறிய பிராணிகள் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஈனியல் பிரிவு என்று பல சிறப்பு மருத்துவ பிரிவுகள் கிடையாது. அதற்கு பதிலாக குதிரை பிரிவு, நாய்கள் பிரிவு, மாடுகள் பிரிவு என்று மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்தன.
தேவையான அறுவை மருத்துவம், பிரசவ இடர்பாடுகள் யாவும் ஒன்றாகவே, அந்தந்த பிராணிகள் பிரிவுகளிலேயே மருத்துவம் செய்யப்படும். இப்போது இருப்பது போல, பல பிரிவுகளிலும் சிறப்பு தேர்ச்சி (Specialist) பெற்ற மருத்துவர்கள் கிடையாது. அறுவை சிகிச்சை துறை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளையும் பொது மருத்துவர்களே செய்தனர்.
நான் படிக்கும்போது பாட திட்டங்களும் இன்றிருப்பது போல அறுவை மருத்துவமும் ஈனியல் மருத்துவமும் தனித்தனி பாடங்களாக இல்லை. அறுவை சிகிச்சையும், பிரசவ சிகிச்சை முறைகளும், அறுவை சிகிச்சை பிரிவிலேயே ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு, தேர்வும் நடத்தப்படும். அப்போது ஈனியல் மருத்துவத்தில் செய்முறை பயிற்சிகளைவிட (practical) ஏட்டு படிப்புக்கே (Theory) முக்கியத்துவம் இருந்தது.
1959-க்குப் பின் தான் அறுவை சிகிச்சை துறையும், ஈனியல் துறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பயிற்சியும், தேர்வும், தனித்தனியாக நடத்தப்பட்டன. ஈனியல் துறை என்ற தனி துறை இல்லாததால், பிரசவ கேஸ்களின் வருகையும் மிகக்குறைவே. மாணவர்களுக்கு பிரசவ இடர்பாடுகளை நீக்கும் மருத்துவ முறை பற்றி புத்தக அறிவு (Theoretical) உண்டே தவிர, செயல்முறை அனுபவ அறிவு அதிகமில்லை. இன்றிப்பது போல, கல்லூரியிலும் பிரசவ இடர்பாடுகளை நீக்கும் முறைகளை பயிற்றுவிக்கும் பாந்தம் (Phantom) பெட்டிகள் கிடையாது.
இந்த நினைவுகளோடு, அந்த குளிர் இரவில், எப்படி அந்த பசுவின் இடர் நீக்கி, மருத்துவம் செய்வது என்றெண்ணியே பதட்டத்துடன் பயணித்தேன்.
சுமார் 30 நிமிட பயணத்துக்குப்பின் வைத்தீஸ்வரன்கோவிலை அடைவதற்கு முன், இருண்ட வயல்வெளிக்கு அருகில் நாங்கள் சென்ற மகிழ்வுந்து நின்றது. அங்கு நின்றிருந்த ஒருவர் கையிலிருந்த லாந்தர் விளக்கை ஆட்டினார். அதோ அங்குதான் அந்த பசுமாடு படுத்திருக்கிறது என்றார் .
மகிழ்வுந்தில் இருந்துஇறங்கிய நானும், என்பணியாளரும், 3 - 4 வரப்புகளை தாண்டி, பசுவிடம் சென்றோம். அங்கு கையில் லாந்தர்விளக்குடன்மேலும் இரண்டு பேர் காவலுக்கு நின்றிந்தனர்.
Wednesday, September 2, 2009
திரும்பிபார்க்கிறேன்- 5
மாயவரத்தில் நான் பணியில் இருந்தபோது தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை முனிசிபல் ஆட்டு இறைச்சி அறுவை கூடத்தை (Slaughter House) மேற்பார்வை இடவேண்டும். பிறகு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மருத்துவ பணிகளை கவனிக்க வேண்டும். காலை 6 மணிக்கு சென்று, இறைச்சிக்காக கசாப்பு கடைக்காரர்கள் கொண்டு வரும் ஆடுகளை சோதனை செய்து, இறைச்சிக்கு தகுதியான ஆடுகளின் வாலில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும். அவ்வாறு அரக்கு முத்திரை வைக்கப்பட்ட ஆடுகளை மட்டுமே அறுவை கூடத்திற்குள் அனுமதிப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் சில நிமிடங்கள் தாமதமாக போனால்கூட, கசாப்பு கடைக்காரர்கள் அதை பெரிது படுத்திவிடுவார்கள். காரணம் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும்.
அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் கால்நடை மருத்துவர், வீடுகளுக்கு சென்று வைத்தியம் செய்வது என்பது அவர்கள் சொந்த விருப்பை பொருத்தது. அது சட்டப்படி அவர்களின் கடமை அல்ல. ஆகையால் மருத்துவ
பணி நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியே சென்று வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவமனை பணி நேரம் தவிர, பிற நேரங்களில் கால்நடை மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் சென்று வைத்தியம் செய்யலாம். அதற்காக அவர் கேட்கும் கட்டணத்தை கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவருக்கு கொடுக்க வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளில் கூட முற்றிலும் இலவச சேவை கிடையாது. மாதம் 100ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சேவை. அவர்கள் கூட சினை பார்க்க 50 பைசா கட்ட வேண்டும். மற்றவர்களுக்கு கட்டண சேவைதான்.
கன்று போட முடியாமல் தவிக்கும் பிராணிகளுக்கு வைத்தியம் செய்யும்போது யாரலும் எவ்வளவு நேரத்திறககுள செய்து முடிக்க முடியும் என்று கூறமுடியது. ஆகையால், காலை 6 மணிக்குள் வைத்தியம் செய்து திரும்பி வேலைக்கு திரும்பமுடியுமா என்று யோசித்தேன். இது போன்ற காரணங்களால்தான் நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தொலை தூரத்தில் உள்ள கிராமத்துக்கு வைத்தியம் செய்ய செல்வதற்கு தயங்கினேன்.
.
Friday, July 17, 2009
திரும்பிபர்ர்க்கிறேன்-4
அப்போது கடும் குளிர். ஒரே இருட்டு வேறு. ஆகவே, வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்துக்கு சென்று, திரும்புவது சிரமம் என்பதால், அந்த பசுவை ஒரு வண்டில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறவும் என்று சொன்னேன்.
அதற்கு, என் பணியாளர், அன்றைய என் வயதின் அளவை போல் இரு மடங்கு அனுபவம் கொண்டவர், 'உங்களை அழைத்து போக வாடகை காருடன் வந்துள்ளார். நானும் தேவையான எல்ல மருந்துகள் மற்றும் உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துள்ளேன். உடனடியாக சென்று வந்துவிடலாம் அய்யா' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.
Wednesday, July 1, 2009
ஒட்டகம்

பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நடுங் கவலைய கானம் நீந்தி "(அகம் 345, 17-19)
ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.
Image courtesy of
Answers in Genesis and the Creation Museum and reference
(http://www.answersingenesis.org/assets/images/articles/zoo/Camel.jpg)
Friday, May 29, 2009
திரும்பிப் பார்க்கிறேன்-3
அந்த மூன்று தாவரங்களில் ஆமணக்கும் ஒன்றாகும்.
எங்கள் மாவட்டத்தில் (தென்னார்க்காடு) இந்த இயற்கை முறை விவசாயத்தை அப்போது எல்லோரும் கடை பிடித்தார்கள். இந்த நிலங்களில் மேய வரும் ஆடுகள் முதலில் வரப்பு ஓரங்களில் ஓரிரு ஆமணக்கு இலைகளை தின்ற உடனேயே, காவலில் இருப்போரால் விரட்டி அடிக்கப்படும்.

சென்னை பல்கலைகழகத்தில் கால்நடை மருத்துவ பட்டம் பெற்ற எனக்கு,
(1) ஏன் அன்று இந்த விபரங்கள் தெரியாமல் போயிற்று?
(2) ஏன் இன்றும் எல்லா கால்நடை மருத்துவமனைகளிலும், இதற்கு மருத்துவம் செய்ய முடியவில்லை?
இதற்கான விளக்கத்தை எனது அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.
Tuesday, May 26, 2009
திரும்பிபார்க்கிறேன்- 2
ஆமணக்கு செடி பற்றியும், அதன் நச்சுத்தன்மை பற்றியும் தெளிவாக அறிந்தால்தான் ஆமணக்கு இலைகளை தின்ற தஞ்சை மாவட்ட ஆட்டுக்குட்டி மட்டும் ஏன் இறந்தது என்பது விளங்கும்.
பொதுவாக, கிராமங்களில் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுத்து (Castor Oil), அதை குழந்தைகளுக்கு மலமிளக்கியாக (laxative) கொடுப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த எண்ணெய் விளக்கு எரிக்க பயன்படுத்தப் பட்டதால், இதை விளக்கெண்ணை என்றே அழைப்பார்கள். ஆனால், இன்று பல தொழிற்சாலைகள் இதை மூல பொருளாக வைத்து பல வித தொழில்கள் இயங்க தேவையான பொருள்களை தயார் செய்கிறார்கள். ஆனால் எண்ணெய் எடுத்தபின் மிச்சமிருக்கும் கழிவு பொருளிலுள்ள நச்சு தன்மை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
[Photo]ஆமணக்கு செடி வெப்ப மற்றும் மித தட்ப வெப்ப பகுதிகளில் வளரும், பூக்கும் வகை சேர்ந்த தாவரமாகும். இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியா (Ethiopia) பகுதி என்று சில குறிப்புகள் கூறினாலும், கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கல்லறைகளில் ஆமணக்கு விதைகள் கண்டெடுக்க பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். கி மு 1552 ஆம் ஆண்டு எழுதப் பட்டதாக கருதப்படும் ஈபர்ஸ் பேபிரஸ் (Eber's Papyrus) என்ற மருத்துவ சுவடியில், ஆமணக்கின் மலமிளக்கும் மருத்துவ குணம் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது. உலக பேரழகி கிளியோபாட்ரா (Cleopatra) தன் கண் அழகை கூட்ட ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஆமணக்கு செடி யாரும் பயிர் செய்யாமலே, பயனற்ற நில[Photo]ங்களிலும், தண்ணீர் தேங்காத ஆற்று படுகைகளிலும் அதிகம் காணப்படும் தாவரமாகும். இதன் பூக்கள் பற்பல வண்ணங்களில் உள்ளதால், கனடா போன்ற நாடுகளில், பூங்கா மற்றும் பங்களா போன்ற இடங்களில் அலங்கார செடிகளாக வளர்க்க படுகின்றன. ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் இதை வர்த்தக நோக்கோடு பணப் பயிராக பயிர் செய்கிறார்கள். உலக நாடுகளில் ஆமணக்கு விதைகளை மிக அதிக அளவில், அதாவது ஆண்டுக்கு சுமார் 8,30,000 டன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்.
ஆமணக்கு செடியின் இலை, அதன் விதை மற்றும் எல்லா பாகங்களிலும் ரெசின் (Ricin) என்ற நச்சுப் புரத வகையை (Toxalbumin) சேர்ந்த மிக கொடிய நஞ்சு உள்ளது. இந்த நஞ்சு, எல்லா உயிரினங்களையும் கொல்லும் நஞ்சு[Photo]களின் வரிசையில் முதல் இரண்டு நஞ்சுகளில் ஒன்றாகும்.
இந்த நஞ்சு, நல்ல பாம்பின் நஞ்சைவிட இரு மடங்கும், சயனைடைவிட (Cyanide) 6000 மடங்கும் கொடியதாகும். ஒரு மனிதனை கொல்ல 0.035 கிராம் ரெசின் போதும். ஒரு ஆமணக்கு விதை ஒரு குழந்தையை கொல்ல போதுமானதாகும். ஆனால் அதிஷ்ட வசமாக இந்த நஞ்சு எண்ணையில் கரையும் தன்மை இல்லாததாலும், நம் கிராமங்களில் ஆமணக்கு எண்ணெய் அடுப்பில் காய்ச்சி தயாரிக்கப் படுவதாலும், விளக்கெண்ணையில் இந்த நஞ்சு இருப்பதில்லை.
தற்போது இந்த நஞ்சு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், புற்று நோய் மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தவும் உபயோகப் படுகிறது. ஆனால், துரதிஷ்ட வசமாக, முதலாம் உலகப் போரில் உபயோகிக்க இந்த நஞ்சு நிரம்பிய ரசாயன குண்டுகளை தயார் செய்தார்கள். இதன் மிக கொடிய அழிவு திறனை எண்ணி, நல்ல காலமாக அவைகளை உபயோகப் படுத்தவில்லை.
பயங்கரவாதமும், குடை குண்டும்
http://www.portfolio.mvm.ed.ac.uk/studentwebs/session2/group12/georgie.htm
Wednesday, May 20, 2009

எனது எண்ணங்கள்
வலைப்பதிவில் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதுமாறு பல நண்பர்கள் கூறிவந்தனர். தொடர்ந்து எழுத நேரமின்மையலும், என்னுடைய அனுபவங்கள் ஒரு குறுகிய வட்டத்திலுள்ள ஒரு சிலரே ஆர்வத்துடன் படிப்பார்கள் என்பதாலும் எழுத தயங்கினேன். எனது "கால்நடைமருத்துவனின் காலடிச்சுவடு " என்ற புத்தகத்தை படித்த பல நண்பர்கள் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும் கட்டாயம் பதிவு செய்யுமாறு வேண்டினர். தஞ்சை மாவட்டத்தில் கால்நடைமருத்துவனாக வாழ்க்கையைத்துடங்கி பல்கலைகழக துணைவேந்தராக ஓய்வு பெற்ற நான் எனது வாழ்வில் சந்தித்த பல நிகழ்வுகள் பற்றியும் அதனுடன்
சம்பந்தபட்ட பல விதமான மனிதர்கள் பற்றியும் எனது எண்ண ஓட்டங்களை எனது இ
டுகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி யுள்ளேன்.
எனது
தொழில்துறையின் வளர்ச்சிக்காக எனது ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களையும், கால்நடைகள் பற்றிய சில அறிவியல் உண்மைகளையும் தெரிவிப்பதே எனது நோக்கம்.
Tuesday, May 5, 2009
திரும்பிப்பார்க்கிறேன்-1
அன்றைய திருவெண்காடு, சிறிய உணவகம் மற்றும் மின்சாரம் கூட இல்லாத ஒரு சிற்றூர் ஆகும். சீர்காழியில் பயிற்சிக்குச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ளேயே திருவெண்காட்டில் திறக்கவிருந்த மருத்துவமனைக்கு என்னை மாற்றி உத்தரவு வந்தது. அத்துடன், சீர்காழி மருத்துவமனையிலிருந்து திருவெண்காடு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு தேவையான சில மருத்துகளை பெற்றுக்கொள்ளு மாறும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அன்று , திருவெண்காட்டில் கால்நடை மருத்துவமனைக்கென்று தனி கட்டடம் இல்லாததால், ஊராட்சி மன்றத்தலைவரின் வீட்டின் எதிர்புறமிருந்த ஒரு கடையில், தற்காலிகமாக மாவட்ட அதிகாரியால் 1959, ஆகஸ்ட் மாதம், 3 ம் தேதி, கால்நடை மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது. ஒரு வாரமே பயிற்சிபெற்ற நான் எந்தவித மருத்துவக்கருவிகளுமின்றி, சீர்காழி மருத்துவர் கொடுத்த ஓரிரு மருந்துகளுடன் எனது முதல் நாள் பணியைத்தொடங்கினேன்.
திறப்பு விழா முடிந்து, மாவட்ட அதிகாரியும், மற்றவர்களும் சென்றபின், எனது எண்ணம் முழுதும், இந்த வசதியில்லா ஊரில், எங்கு தங்குவது? எங்கு சாப்பிடுவது? என்பதாகவே இருந்தது அப்பொழுது, பக்கத்துக்கு கிராமத்திலிருந்து ஒருவர் , ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சைக்கிளில் வைத்து , மருத்துவம் செய்ய கொண்டுவந்தார். "டாக்டர் அய்யா, இந்த ஆட்டுக்குட்டி, பக்கத்துக்கு தோட்டத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட ஆமணக்கு இலைகளை தின்றுவிட்டது. உடனடியாக ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று வேண்டினார்.
நான் பழைய தென்னாற்காடு மாவட்டதைச்சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில், புஞ்சை நிலங்களில், கடலைப்பயிருடன் ஊடு பயிராக கம்பு, துவரை மற்றும் ஆமணக்கு பயிர் இடுவதுண்டு. அவ்வாறு பயிர் இடப்பட்ட நிலங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், ஆமணக்கு இலைகளை தின்பதை, சிறு பையனாக பார்த்திருக்கி்றேன். அவ்வாறு தின்னும் ஆடுகளை விரட்டியோ அல்லது பிடித்து பட்டியில் அடைத்தோ விடுவார்கள். எனக்கு தெரிந்து எந்த ஒரு ஆடும் இறந்ததில்லை.
நான் கல்லூரியில் படித்தபோது ஆமணக்கு இலையை கால்நடைகள் உண்டால் கேடுவருமென்று யாரும் கூறவில்லை. ஆகையால், "ஆமணக்கு இலையை தின்றதால் ஆபத்து ஒன்றுமில்லை. அதற்கு எந்த வைத்தியமும் தேவையில்லை" என்று கூறினேன்.
ஆனால், அந்த விவசாயியோ, " இல்லை அய்யா, ஆட்டுக்குட்டி இறந்துவிடும். ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று திரும்ப, திரும்ப வலியுறுத்தினார். நான் எனது கிராமத்தில் கண்ட அனுபவத்தை கூறி , "ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது " எனக்கூறி எந்த வைத்தியமும் செய்யாமல் அனுப்பிவைத்தேன்
காலை அலுவல் நேரம் முடிந்தவுடன், உள்ளூர் கோவிலிலிருந்து அனுப்பட்ட பிரசாதத்தை மதிய உணவாக உண்டபின், இரவு எங்கு தங்குவது எண்ணதிலேயே மூழ்கி,மருத்துவமனையில் உட்கார்ந்திருந்தேன். காலையில் வந்த விவசாயி சைக்கிளின் பின் ஒரு கூடையை வைத்துக்கொண்டு மறுபடியும் வந்து நின்றார். அந்த கூடையிலிருந்து இறந்த ஆட்டுக்குட்டி ஒன்றை எடுத்து வந்து " டாக்டர் அய்யா, காலையில் பலமுறை கேட்டும், வைத்தியம் செய்யாமல் ,
ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அனுப்பி வைத்தீர்கள் . இப்பொழுது பாருங்கள் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது." என்று கூறி விட்டு எனது பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்று விட்டார்.
எங்களூரில் ஆமணக்கு இலையைத்தின்ற பல ஆடுகளில் ஒன்று கூட இறக்காதபோது ஏன் இந்த ஆட்டுக்குட்டி மட்டும் இறந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.அந்த மாவட்டத்தில் வேலை செய்த பல மூத்த கால்நடை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான விளக்கத்தை யாரிடமிருந்தும் என்னால் பெறமுடிய வில்லை. பின்னாளில், சிறப்புப் பயிற்சி பெற (Specialization) படிக்கும் போது தான் , மேலைநாட்டு வல்லுனர்களின் கட்டுரைகளிலிருந்து, அந்த ஆட்டுக்குட்டி இறந்த காரணத்தை அறிந்தேன். அது பற்றி அடுத்த இடுகையில்