Sunday, November 15, 2009

தொலைக்காட்சி நேர்காணல்

வரும் திங்கள் கிழமை அன்று (16.11.2009) கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8.00 மணி முதல் 8.50 மணி வரை ஒளிபரப்பாகும் சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. திரு ரமேஷ் பிரபா அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இத்தகவல் நமது வலை தள நண்பர்களுக்காக.

Thursday, November 5, 2009

திரும்பிப்பார்க்கிறேன்-8


புத்தக அறிவு எவ்வளவு இருந்தாலும், அனுபவ அறிவும் தேவை
-------------------------------------------------------------------------------------
அந்த மத்தின் தலையை தட்டி எடுத்துவிட்டு, தினந்தோறும் வெண்ணையில் பட்டு, நனைந்து கடினமான கைப்பிடியை மட்டும் தனியே எடுத்து, ஒரு முனையை கொடுவாளால் கூராக செதுக்கினார் (படம் -1).

படம் -1
அது கூர் சீவப்பட்ட பென்சில் போல ஆயிற்று. பின், வெளியே நீட்டிக்கொண்டிருந்த முன்னங்கால்களின் கணுக்காலில் குளம்பை சுற்றி ஒட்டி இருந்த தோல் பகுதியை Embryotomy knife (படம்.-2) மூலம் வெட்டி எடுக்குமாறு கூறினார். அவ்வாறு தோலை வெட்டிய உடன், அந்த வெட்டிய பகுதியில் கூராக்க பட்ட கைப்பிடியின் கூர்முனையை 45 டிகிரி சாய்வாக உள்நோக்கி வைத்து, ஒரு கட்டையில் தனது பலம் கொண்டமட்டும் அந்த கைப்பிடியின் மறுமுனையில் அடித்தார்.

படம் -2
அடித்த வேகத்தில் கணுக்காலில் இருந்து தோள் பட்டை வரை தோல் கிழிந்தது. மத்தின் கைப்பிடி எடுத்து, அதை கூர் சீவியதன் அர்த்தத்தை என்னால் அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அறுவை மருத்துவ முறைப்படி, இறந்த கன்றை வெட்டி எடுக்க உபயோகப்படும் உளியின் (Deburis Chisel)முனை ஒரு தலை கீழாக எழுதப்பட்ட 'ப' போல் கூராக இருக்கும். அடுத்த முனையில் கைப்பிடி இருக்கும். குளம்பை சுற்றி உள்ள தோலை சிறிது வெட்டி விட்டு அந்த உளியின் கூரான பகுதியை வெட்டி எடுத்த பகுதியில் வைத்து, கைப்பிடியை பிடித்து வேகமாக உள்நோக்கி அழுத்தினால் தோள்பட்டை வரை தோல் வெட்டப்படும்.(படம்-3)


அதற்குப்பின் அந்த காலை பிடித்து திருகினால், தோள்பட்டை வரை, உடலிலிருந்து பிரித்து சுலபமாக வெளியில் எடுத்து விடலாம். பின் அதுபோல் மறு முன்னங்காலையும் வெட்டி எடுத்து விடலாம். அவ்வாறு இரு முன்னங்கால்களையும் வெட்டி எடுத்து விட்டால், கையை கர்பப்பையில் விட்டு, இறந்த கன்றின் தலையை சுலபமாக நேர் செய்து வெளியே எடுத்துவிட முடியும்.

இந்த முறையில் இரு கால்களையும் வெட்டி எடுக்க அந்த கடினமான மர மத்தின் கை பிடியை கத்தியாக உபயோகித்து, இரண்டு கால்களையும் வெட்டி வெளியே எடுத்தேன். பிறகு சுலபமாக கர்ப்ப பையினுள் கையை விட்டு பார்த்த போதுதான், அந்த இறந்த கன்றின் தலை இடுப்பு எலும்புக்கு கீழே (Pelvic Bone) சென்று சிக்கி இருந்தது (படம்-4 & 4A) தெரிந்தது.

படம்-4

அப்பசு கன்று போட முடியாமல் தவிக்கும் போது, பிரசவ முறை பற்றி எந்த அறிவும் இல்லாத சில ஆட்கள், தலையை நேராக்காமல், வெளியே தெரிந்த இரண்டு கால்களை மட்டும் பிடித்து இழுத்ததால் தலை இடுப்பு எலும்புக்கு கீழ் சென்று சிக்கிக் கொண்டது.
அது தெரியாமல் இரண்டு நாட்களாக பலரும் காலை மட்டும் திரும்ப திரும்ப பிடித்து இழுத்ததால், கன்று மூச்சு திணறி கர்ப்ப பையினுள்ளேயே இறந்து, உப்பி விட்டது. அதனால் தான் கர்ப்ப பையில் கை விட்டு பரிசோதனை செய்ய கூட இடமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது.

படம்-4A

கன்றின் கால்களை வெட்டி எடுத்த உடன், தலையை நேர் செய்து, இடுப்பு எலும்புக்கு மேலே கொண்டு வந்து, கயிற்றை கட்டி மெதுவாக வெளியே எடுத்து, இறந்த கன்றை தாயிடமிருந்து பிரித்தேன். பிறகு, தேவையான மருத்துவம் செய்துவிட்டு, காலை ஆறு மணிக்குள் மறுபடியும் மாயவரம் வந்து சேர்ந்தேன்.

கிராமங்களில் கன்று போட முடியாமல், பிரசவ அவஸ்தை படும் கால்நடைகளுக்கு எல்லா கால்நடை மருத்துவர்களாலும், கன்றை வெளியே எடுத்து மருத்துவம் செய்ய முடியாது. நல்ல திடகாத்திரமான உடலும், எந்த நிலையிலும் தளராது நின்று வேலை செய்யும் திறமையும், நல்ல மனோ திடமும், சுற்றுப்புற சூழலை அனுசரித்து வேலை செய்யும் திறனும், ஆழ்ந்த மருத்துவ அறிவும் உள்ளவரால் மட்டுமே பிரசவ கேஸ்களை வெற்றிகரமாக மருத்துவம் செய்ய முடியும். அத்துடன், நல்ல திடகாத்திரமான, வலிமையுள்ள இரு உதவியாளர்களும், தக்க உபகரணங்களும் தேவை.

இந்த நிகழ்வு, எனக்கு இரண்டு முக்கிய பழமொழிகளை நினைவூட்டியது.

1. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
2. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"

அத்துடன், எலும்பு கூடும், சதையும் இணைந்தால்தான், ஒரு முழு உருவம் தோன்றுவது போல, கல்லூரி புத்தக அறிவும், அனுபவ அறிவும், சேர்ந்தால்தான் ஒரு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவராக திகழ முடியும் (Bony theoretical knowledge must be covered with flesh of practice to become a full-fledged veterinarian) என்று உலக புகழ் பெற்ற கால்நடை மருத்துவரான ஜேம்ஸ் ஹேரியட் எழுதி உள்ளது என் நினைவிற்கு வந்தது.

என்னுடைய பணியாள் ஏழு வயது பையனாக வேலையில் சேர்ந்து, பல ஆண்டுகளாக பல கால்நடை மருத்துவர்களின் கீழ் வேலை செய்தபோது, ஒவ்வொரு கால்நடை மருத்துவரும் கடைபிடித்த பல புதிய உத்திகளை கூர்ந்து கவனித்து வந்ததால், அவரால் அன்று எனக்கும் உதவ முடிந்தது.

இந்நிகழ்வு, பின்னாட்களில் பல கடினமான பிரசவ கேசுகளை வெறறிகரமாக கையாள உதவியாக இருந்தது.

Wednesday, October 7, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 7

அங்கு சென்றபின்தான், அந்த விவசாயி கூறியது போல, அந்த பசு அன்று மாலையிலிருந்துதான் கன்று ஈன முடியாமல் தவிக்கிறது என்பது பொய் என்று தெரிய வந்தது. அந்த பசு கடந்த இரண்டு நாட்களாக கன்று ஈன முடியாமல் தவிப்பதோடு, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சில நாட்டு வைத்தியர்கள் வந்து கன்றை வெளியே எடுக்க முயற்சித்து, அது முடியாமல் திரும்பி விட்டனர் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த கடுங்குளிர் இரவில், சட்டையை கழற்றிவிட்டு சுடுநீர் கிடைக்கததால், குளிர்ந்த நீரிலேயே கையை கழுவி, சோப்பு போட்டு, சிறிய லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்தபோது, திடுக்கிட்டேன். பசுவின் பிறப்பு உறுப்பினுள் என் சுண்டு விரல் நுழைய கூட இடமில்லை. கன்று இறந்து, அதன் கால்கள் உப்பி, பெருத்து இருந்தன. நாட்டு வைத்தியர்கள் முரட்டுத்தனமாக இழுத்ததால், இரண்டு முன்னங்கால்களும் கணுக்கால் வரை வெளியே நீட்டி கொண்டிருந்தன. தலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. .


இது போன்ற கேஸ்களில், கால்களை வெட்டி எடுத்தால்தான், கை உள்ளே நுழைய இடம் கிடைக்கும் என்று படித்துள்ளேன். அவ்வாறு வெட்டி எடுப்பதற்கு Subcutaneous fetotomy என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இவ்வாறு வெட்டி எடுக்க தேவையான உபகரணமான உளி (Deburis Chisel) மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட பெட்டி (Thygesen embryotome) தேவைப்பட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த உபகரணம், கல்லுரியிலேயே கிடையாது. எனது கல்லூரி காலம் முடியும் தறுவாயில்தான், டென்மார்க் நாட்டுக்கு சென்று ஈனியல் மருத்துவத்தில் பயிற்சி பெற்று வந்த ஒரு விரிவுரையாளர், இந்த கருவிகளை உபயோகிப்பது எப்படி என்று கரும்பலகையில் படம் வரைந்து விளக்கியிருந்தார். அவருடைய முயற்சியால், இந்த கருவி மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சில முக்கிய மருத்துவமனைகளுக்கு மட்டும், அரசால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் மாயூரம் கால்நடை மருத்துவமனையும் ஒன்றாகும்.


நான் பொறுப்பேற்பதற்கு ஒரு மாதத்திற்குள் முன்தான், அந்த கருவி பெறப்பட்டு, பார்சல் வந்த சிப்பம் கூட உடைக்கப்படாமல் வைக்கபட்டிருந்தது. நான் பொறுப்பேற்கும்போது, மருத்துவமனை சாமான்களை சரி பார்க்கும்போதுதான், அந்த பெட்டியை பார்த்தேன். அதை அதுவரை யாரும் பிரித்துக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கும் அதை பயன்படுத்தும் முறை தெரியாது. இந்த பெட்டியின் உபயோகம் தெரியாததால், எனது பணியாள் அந்த பெட்டியை எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். திரும்பவும் மாயூரம் சென்று அந்த கருவியை எடுத்து வரவேண்டுமானால், அதற்குள் பொழுது விடிந்துவிடும். காலை பணிக்கு செல்ல முடியாது.


என்ன நீ இவ்வாறு செய்துவிட்டாய்? நீ எல்லா உபகரணங்களையும் எடுத்து வந்திருப்பாய் என நம்பி வந்தது எவ்வளவு தவறாக போய்விட்டது பார்? என்று எனது பணியாளை கடிந்துகொண்டேன்.


அதற்கு அந்த பணியாள் 'இல்லை அய்யா, நம்மிடமிருக்கும் கருவிகளை கொண்டே, கன்றை வெளியே எடுத்துவிடலாம்' என்று துணிவுடன் கூறினார். என்னுடைய புத்தக அறிவு, அந்த கருவியின்றி கன்றை வெளியே எடுக்க முடியாதே, என்ன செய்வது என்று யோசிக்க வைத்து.


ஆனால் எனது பணியாள் அந்த மாட்டின் சொந்த காரரை பார்த்து, 'மரத்தால் ஆன தயிர் கடையும் மத்தும் கூடவே ஒரு கொடுவாளும் உடனே வேணும். போய் எடுத்து வா' என்றார். மாட்டின் சொந்தகாரர் உடனே ஊருக்குள் சென்று, தயிர் கடையும் மர மத்து மற்றும் கொடுவாளுடன் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்தையும் கொடுவாளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தேன்.

- தொடரும்

Monday, September 21, 2009

திரும்பிப்பார்க்கிறேன் - 6

ஏழை விவசாயியின் தவிப்பையும், பணியாளரின் விருப்பையும் அறிந்த நான், தொலை தூரத்தில் உள்ள அக் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அவ்விவசாயியிடம் விசாரித்தபோது, மாலையில் மேய சென்ற பசு வயல் வெளியிலேயே கன்று போட முடியாமல் தவித்து, படுத்து கிடப்பதாகவும், கன்றின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே வந்துள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதான் அப்பசுவுக்கு தலை பிரசவம் (முதல் பிரசவம்) என்றும் கூறினார்.


மேற்கண்ட விவரங்களை கேட்டறிந்த நான், அந்த கடுங்குளிர் இரவில், எனது பணியாளருடன், பதற்றத்துடன் மகிழ்வுந்தில் (காரில்) பயணித்தேன். எனது பதற்றத்துக்கு முக்கிய காரணம், எனது பணியில் நான் பார்க்கபோகும் முதல் பிரசவ கேஸ் இதுதான் என்பதே.


அது மட்டுமின்றி, எனது கல்லூரி பயிற்சி காலத்தில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில், பிரசவ வேதனையோடு மருத்துவ உதவி கேட்டு ஒரு பசு கூட கொண்டுவரப்படவில்லை.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் நோயுற்ற குதிரைகளும், நாய்களுமே அதிகம் வரும். பார வண்டி இழுக்கும் ஒரு சில காளை மாடுகள் மட்டுமே கழுத்து புண், வயிறு உப்புசம் மற்றும் கொம்பு முறிவு போன்றவற்றுக்காக சிகிச்சைக்கு கொண்டு வரப்படும். பசுக்கள் மற்றும் எருமை மாடுகளின் வருகை மிகக் குறைவே. ஆகவே, அந்நாட்களில் பயின்ற கால்நடை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்று, கால்நடை துறையில் பணியில் சேர்ந்த பிறகுதான் மாட்டின சிகிச்சையில் (Bovine practice) அனுபவம் பெற முடியும்.


சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், இப்போது இருப்பது போல, பெரிய பிராணிகள் மற்றும் சிறிய பிராணிகள் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஈனியல் பிரிவு என்று பல சிறப்பு மருத்துவ பிரிவுகள் கிடையாது. அதற்கு பதிலாக குதிரை பிரிவு, நாய்கள் பிரிவு, மாடுகள் பிரிவு என்று மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்தன.

தேவையான அறுவை மருத்துவம், பிரசவ இடர்பாடுகள் யாவும் ஒன்றாகவே, அந்தந்த பிராணிகள் பிரிவுகளிலேயே மருத்துவம் செய்யப்படும். இப்போது இருப்பது போல, பல பிரிவுகளிலும் சிறப்பு தேர்ச்சி (Specialist) பெற்ற மருத்துவர்கள் கிடையாது. அறுவை சிகிச்சை துறை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளையும் பொது மருத்துவர்களே செய்தனர்.


நான் படிக்கும்போது பாட திட்டங்களும் இன்றிருப்பது போல அறுவை மருத்துவமும் ஈனியல் மருத்துவமும் தனித்தனி பாடங்களாக இல்லை. அறுவை சிகிச்சையும், பிரசவ சிகிச்சை முறைகளும், அறுவை சிகிச்சை பிரிவிலேயே ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு, தேர்வும் நடத்தப்படும். அப்போது ஈனியல் மருத்துவத்தில் செய்முறை பயிற்சிகளைவிட (practical) ஏட்டு படிப்புக்கே (Theory) முக்கியத்துவம் இருந்தது.

1959-க்குப் பின் தான் அறுவை சிகிச்சை துறையும், ஈனியல் துறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பயிற்சியும், தேர்வும், தனித்தனியாக நடத்தப்பட்டன. ஈனியல் துறை என்ற தனி துறை இல்லாததால், பிரசவ கேஸ்களின் வருகையும் மிகக்குறைவே. மாணவர்களுக்கு பிரசவ இடர்பாடுகளை நீக்கும் மருத்துவ முறை பற்றி புத்தக அறிவு (Theoretical) உண்டே தவிர, செயல்முறை அனுபவ அறிவு அதிகமில்லை. இன்றிப்பது போல, கல்லூரியிலும் பிரசவ இடர்பாடுகளை நீக்கும் முறைகளை பயிற்றுவிக்கும் பாந்தம் (Phantom) பெட்டிகள் கிடையாது.

இந்த நினைவுகளோடு, அந்த குளிர் இரவில், எப்படி அந்த பசுவின் இடர் நீக்கி, மருத்துவம் செய்வது என்றெண்ணியே பதட்டத்துடன் பயணித்தேன்.

சுமார் 30 நிமிட பயணத்துக்குப்பின் வைத்தீஸ்வரன்கோவிலை அடைவதற்கு முன், இருண்ட வயல்வெளிக்கு அருகில் நாங்கள் சென்ற மகிழ்வுந்து நின்றது. அங்கு நின்றிருந்த ஒருவர் கையிலிருந்த லாந்தர் விளக்கை ஆட்டினார். அதோ அங்குதான் அந்த பசுமாடு படுத்திருக்கிறது என்றார் .


மகிழ்வுந்தில் இருந்துஇறங்கிய நானும், என்பணியாளரும், 3 - 4 வரப்புகளை தாண்டி, பசுவிடம் சென்றோம். அங்கு கையில் லாந்தர்விளக்குடன்மேலும் இரண்டு பேர் காவலுக்கு நின்றிந்தனர்.




Wednesday, September 2, 2009

திரும்பிபார்க்கிறேன்- 5

அந்நாட்களில் அரசு சட்ட திட்டங்கள் மிக கடுமையானவை. அரை நாள் தற்செயல் விடுப்பு எடுக்க வேண்டுமானாலும், மாவட்ட அதிகாரிக்கு மனு செய்து, அவர் மாற்று ஏற்பாடாக வேறு ஒருவரை அனுப்பி, அவர் வந்து பதவி ஏற்றபின் தான் விடுப்பில் செல்ல முடியும். அது போல மருத்துவமனைக்கும் வேலை நேரததில் ( திங்கள் முதல் சனி வரை - காலை 8 மணி முதல் 12 மணி மணி வரை, மாலை 3 முதல் 5 வரை, ஞாயிறு, காலை 8 முதல் 12 வரை) எக்காரணம் கொண்டும் தாமதமாக வரவோ, அல்லது மருத்துவமனை மூட வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவோ செல்ல முடியாது. எவ்வளவு அவசரமானாலும், மருத்துவமனை நேரத்தில், மருத்துவமனையை விட்டு சொந்த வேலைக்காகவோ, வெளியில் மருத்துவம் செய்யவோ போகமுடியாது. அவ்வாறு யாராவது வெளியே சென்றிருக்கும் போது, மேலதிகாரிகள் வந்துவிட்டால் கால்நடை மருத்துவரின் பாடு திண்டாட்டமே. எங்கள் மாவட்டத்திலேயே ஒரு கால்நடை மருத்துவர் பஞ்சாயத்து போர்டு மாட்டிற்கு (Conservancy Bullock ) வைத்தியம் செய்துவிட்டு பிற்பகல் பணிக்கு மதியம் 3.05 க்கு வந்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

மாயவரத்தில் நான் பணியில் இருந்தபோது தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை முனிசிபல் ஆட்டு இறைச்சி அறுவை கூடத்தை (Slaughter House) மேற்பார்வை இடவேண்டும். பிறகு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மருத்துவ பணிகளை கவனிக்க வேண்டும். காலை 6 மணிக்கு சென்று, இறைச்சிக்காக கசாப்பு கடைக்காரர்கள் கொண்டு வரும் ஆடுகளை சோதனை செய்து, இறைச்சிக்கு தகுதியான ஆடுகளின் வாலில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும். அவ்வாறு அரக்கு முத்திரை வைக்கப்பட்ட ஆடுகளை மட்டுமே அறுவை கூடத்திற்குள் அனுமதிப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் சில நிமிடங்கள் தாமதமாக போனால்கூட, கசாப்பு கடைக்காரர்கள் அதை பெரிது படுத்திவிடுவார்கள். காரணம் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும்.

அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் கால்நடை மருத்துவர், வீடுகளுக்கு சென்று வைத்தியம் செய்வது என்பது அவர்கள் சொந்த விருப்பை பொருத்தது. அது சட்டப்படி அவர்களின் கடமை அல்ல. ஆகையால் மருத்துவ
பணி நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியே சென்று வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவமனை பணி நேரம் தவிர, பிற நேரங்களில் கால்நடை மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் சென்று வைத்தியம் செய்யலாம். அதற்காக அவர் கேட்கும் கட்டணத்தை கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவருக்கு கொடுக்க வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளில் கூட முற்றிலும் இலவச சேவை கிடையாது. மாதம் 100ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சேவை. அவர்கள் கூட சினை பார்க்க 50 பைசா கட்ட வேண்டும். மற்றவர்களுக்கு கட்டண சேவைதான்.

கன்று போட முடியாமல் தவிக்கும் பிராணிகளுக்கு வைத்தியம் செய்யும்போது யாரலும் எவ்வளவு நேரத்திறககுள செய்து முடிக்க முடியும் என்று கூறமுடியது. ஆகையால், காலை 6 மணிக்குள் வைத்தியம் செய்து திரும்பி வேலைக்கு திரும்பமுடியுமா என்று யோசித்தேன். இது போன்ற காரணங்களால்தான் நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தொலை தூரத்தில் உள்ள கிராமத்துக்கு வைத்தியம் செய்ய செல்வதற்கு தயங்கினேன்.
.

Friday, July 17, 2009

திரும்பிபர்ர்க்கிறேன்-4

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவ மனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் ஒரு குழந்தையின் கழுத்திலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கியதாக செய்தி தாள்களில் வந்த செய்தியை படித்திருப்பீர்கள். இது தவறானாலும், அந்த தொழிலாளியின் துணிவையும், திறமையையும் யாராலும் மறுக்க முடியாது. அவர் முறையாக மருத்துவம் பயிலா விட்டாலும், பல மருத்துவர்கள் அறுவை மருத்துவம் செய்யும் பொது உடன் இருந்து பார்த்து பழகியதால், அந்த தொழிலை துணிவுடன் அறுவை மருத்துவம் செய்துள்ளார். அதற்கும் ஒரு தனி திறமை தேவை. என்னுடைய பணிகாலத்திலும் இது போன்று நடந்த ஒரு நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருவெண்காட்டில் என் நான்கு மாத பணிக்குப்பின் டிசம்பர் மாத மத்தியில் மாயவரம் (இன்றைய மயிலாடுதுறை) கால்நடை மருத்துவமனைக்கு மாற்றபட்டேன். அப்போது மாயவரம் கால்நடை மருத்துவமனை ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்தது. வீட்டின் முன் பகுதி மருத்துவமனையாகவும், பின் பகுதி மருத்துவரின் வீடாகவும் இருந்தது. இரவில் அவசர மருத்துவத்திற்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவருக்கு உதவ ஒரு பணியாளர், மருத்துவமனையில் பணியில் இருப்பது உண்டு.

நான் மாயவரத்தில் பணியில் சேர்ந்த மறுநாள் இரவு இரண்டு மணிக்கு, இரவு பணியில் இருந்த பணியாள், என்னை எழுப்பி, 'வைதீஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பசு கன்று ஈன முடியாமல் தவிப்பதாகவும், உடனடியாக வந்து உதவுமாறும் வேண்டி ஒரு விவசாயி வந்துள்ளார்' என்று கூறினார்.

அப்போது கடும் குளிர். ஒரே இருட்டு வேறு. ஆகவே, வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்துக்கு சென்று, திரும்புவது சிரமம் என்பதால், அந்த பசுவை ஒரு வண்டில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறவும் என்று சொன்னேன்.

அதற்கு, என் பணியாளர், அன்றைய என் வயதின் அளவை போல் இரு மடங்கு அனுபவம் கொண்டவர், 'உங்களை அழைத்து போக வாடகை காருடன் வந்துள்ளார். நானும் தேவையான எல்ல மருந்துகள் மற்றும் உபகரணங்களை தயாராக எடுத்து வைத்துள்ளேன். உடனடியாக சென்று வந்துவிடலாம் அய்யா' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

முதலில் தயங்கிய நான், பிறகு அந்த கடுங்குளிர் இரவில் அந்த கிராமத்துக்கு சென்று மருத்துவம் செய்ய முடிவெடுத்து, உடை மாற்ற தயார் ஆனேன். ஆனாலும் பலவித என்ன அலைகள் மனதில் தோன்றி என்னை குழப்பமடைய செய்தன.

மருத்துவர் என்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை செய்ய வேண்டும்தானே? அதுதானே மருத்துவர் கடமை. அதில் குழம்ப என்ன இருக்கிறது? என்றுதான் பொதுவாக யாருமே நினைப்பார்கள்.

ஆனால், மருத்துவம் செய்ய வெளியூர் செல்ல நான் தயங்கியதற்கு என்ன காரணம்? அன்றைய அரசு சட்ட திட்டங்கள் என்ன?
இவை குறித்து நான் அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, July 1, 2009

ஒட்டகம்




"எலும்பு தின்னும் ஒட்டகம்"

பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய பல செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனாலும், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டதக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன.

உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில்

பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

"குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நடுங் கவலைய கானம் நீந்தி "(அகம் 345, 17-19)

இது பற்றி விளக்கம் அளித்த ஆசிரியர், ஒட்டகம் எலும்பை தின்பதாக புலவர் கூறி இருப்பது செவி வழி செய்தியாக தோன்றுகிறது. ஒட்டகம் எலும்பை தின்பது உண்மையன்று என்று எழுதி உள்ளார்.

அனால், கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பை தின்னும் என்பது உண்மையே. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாது சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் எலும்பை தின்று இக்குறையை போக்கி கொள்ளும் என்பது உண்மையே. இந்நோய் இன்றும் இந்தியாவில் ஒட்டகம் அதிகமுள்ள ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காணப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் , பிகானீரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் இயங்கும் ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் இந்நோய் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்ய பட்டுள்ளன.

ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.

Image courtesy of
Answers in Genesis and the Creation Museum and reference
(http://www.answersingenesis.org/assets/images/articles/zoo/Camel.jpg)