Thursday, July 1, 2010

தினமலரின் தவறான தகவல்

27.06.2010 தினமலரில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பெயர் பலகை இன்னமும் "Madras Veterinary College” என்றே உள்ளது என்பதே அது. அத்துடன் கூடவே ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது.

இந்த செய்தியை பத்திரிகைக்கு தந்த நிருபர் ஒன்று பத்திரிகை தர்மம் என்பதை குழிதோண்டி புதைக்கும் நோக்குடையவராக இருக்கவேண்டும். அல்லது வேறு எதோ உள்நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.

காரணம், கல்லூரியில் நுழைபவர் அனைவருக்கும் முதலில் கண்ணில் படும் வகையில் "சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி" என்று அழகிய தமிழில் வைக்கப்பட்டுள்ள பெரிய பெயர் பலகையை வேண்டுமென்றே மறைத்து, இரண்டாவதாக ஆங்கிலத்தில் வைத்துள்ள பெயர்பலகையை மட்டும் பெரிதாக புகைப்படம் எடுத்து செய்தி கொடுத்திருக்கிறார்.
முழுமையான படம்




ஒரு செய்தி உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிப் பவருக்குதான் நிருபர் என்று பெயர். வேண்டுமென்றே உண்மையை மறைக்கும் நிருபரை என்னவென்று அழைப்பது?

அது மட்டுமல்ல. வேப்பேரி நெடுஞ்சாலையில் கல்லூரியின் நுழை வாயிலில் வைத்துள்ள பெயர் பலகையில் கல்லூரியின் பெயர் முதலில் தமிழிலும், அதன் கீழே இரண்டாவதாகத்தான் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த பெயர் பலகையையும் வேண்டுமென்றே மறைத்திருக்கிறார் நிருபர்.

"மெட்ராஸ் சென்னையாக மாறி பல ஆண்டுகள் ஆனது. ஆனால் கால்நடை மருத்துவக்கல்லூரியின் பெயர் பலகை இன்னமும் ஆங்கிலத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார் நிருபர்.

இது, நிருபருக்கு போதுமான அளவு அறிவாற்றலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டது. ஆனால், சென்னை பல்கலைகழகம் ஆங்கிலத்தில் இன்னமும் University of Madras என்றே அழைக்கப்படுகிறது. சென்னை மருத்துவக்கல்லூரி இன்னமும் Madras Medical College என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இந்த பெயர்களில் இக்கல்லூரிகள் உலக அளவில் பிரபலமாகிவிட்டன. மேலும் தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த கல்லூரிகளை இந்த பெயரிலேயே அங்கீகரித்துள்ளன. ஆகவே, இந்த பெயரை மாற்றினால், கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பாக நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகள் எழும். இது போன்ற நியாயமான காரணங்க ளால்தான் ஆங்கிலத்தில் எழுதும்போது இது போன்று எழுதுவதை அரசு அனுமதித்துள்ளது.


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவியர் படிக்கின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற மேரிலான்ட், மிச்சிகன், நெப்ரஸ்கா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவ மாணவியரை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பு கின்றன. மலேசியா புத்ர பல்கலைகழகம், பங்களாதேசிலுள்ள சிட்டகாங் பல்கலைக்கழகம் போன்றவை கூட தங்கள் மாணவர்களை இங்கு பயிற்சிக்காக அனுப்புகின்றன. இந்நிலையில் தமிழ் தெரியாத அவர்கள் புரிந்துகொள்ள ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற காரணங்களால்தான் ஆங்கிலத்திலும் பெயர்ப் பலகை வைத்துள்ளார்கள்.

மேற்கண்ட உண்மைகள் எதுவும் தெரியாமலோ அல்லது தெரிந்தும், வேறு ஏதோ உள்நோக்கமுடனோ, பத்திரிகை சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி, இதுபோன்று மக்களை திசை திருப்பும் செய்தியை இந்நிருபர் எழுதியுள்ளார்.

நிருபர்தான் இதுபோன்று ஒரு செய்தியை தருகிறார் என்றால் பாரம்பரியம் மிக்க தினமலர் நாளேடு இச்செய்தி பற்றி விசாரிக்காமல் எப்படி வெளியிட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் திடீரென 28.06.2010 தினமலரில் மீண்டும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர் பலகைகளை வெளியிட்டு, மீண்டும் மெட்ராஸ் என்பதை சென்னை என்று எப்போது மாற்றுவார்களோ? என்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.


நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க, உலகப்புகழ் பெற்ற சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியின் பெயர் பலகை பற்றி தேவையில்லாத, உண்மைக்கு புறம்பான தகவலுடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ள தினமலரின் செய்கை, தினமலரின் நெடுநாள் வாசகனான எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கிறது.

ஒரு தகவல் உண்மையா என்பதை அறிந்துகொள்ள பத்திரிகையில் அது குறித்து வந்துள்ளதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால் பத்திரிகைகளே இதுபோன்று தவறான, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டால், அதன் நம்பகத் தன்மை குறைந்துவிடாதா?

பத்திரிகைகள் மக்களிடம் உள்ள செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள, நிருபர்கள் தரும் செய்திகளை அப்படியே வெளியிடாமல், உரிய முறையில் விசாரித்து, உண்மையை வெளியிட வேண்டும்.

பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடவென்றே சில பத்திரிகைகள் உள்ளன. தினமலர் போன்ற பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இதுபோன்ற வேலைகளை செய்யவேண்டுமா?

Thursday, May 6, 2010

திரும்பிப் பார்க்கிறேன்- 9

அதீத ஆர்வம், ஆபத்தை விளைவிக்கும்

யூரியா நச்சேற்றத்தால் பாதிக்கப்பட்ட பசுக்கள்

"தீவனம் சாப்பிட்ட மாடுகள் திடீரென இறந்தன" என்ற செய்தி சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகின. இது ஒன்றும் புதிதல்ல. பல்லாண்டுகளாகவே இது போன்ற பிரச்சினைகள் உண்டு.

1959 டிசம்பர் மாதத்தில் நான் மாயவரத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் இரவு சுமார் 8 மணி அளவில் வெளியே சென்று, இரவு உணவு அருந்திவிட்டு எனது இரு சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, மருத்துவமனை முன்பு ஒரு பியட் கார் நிற்பதை கண்டேன். யாரோ, அவசர சிகிச்சைக்கு வந்துள்ளார்கள் என்று எண்ணியபடியே மிதிவண்டியை வேகமாக ஓட்டி வந்தேன். நான் மருத்துவமனைக்கு முன் வந்து மிதிவண்டியில் இருந்து இறங்குமுன், மருத்துவமனை அலுவலக அறையில் மின் விளக்கு எரிவதை பார்த்ததோடு, எனது இரவு பணியாள் யாரோ ஒருவரோடு பேசுவதையும் கேட்க முடிந்தது. அப்போது, காரில் இருந்த காரோட்டி

"டாக்டர் அய்யா வந்தாச்சு"

என்று உரத்த குரலில் கூவினார்.

உடனே, எனது அலுவலக அறையிலிருந்து எனது பணியாளும், ஒரு இளைஞரும் என்னை நோக்கி வந்தார்கள்.

அந்த இளைஞர்

"டாக்டர் அய்யா, ரொம்ப அர்ஜென்ட். இன்னிக்கு சாயங்காலம், என்னோட பசு மாடுங்க சிலதுங்க செத்துடிச்சு. நீங்க உடனே என்னோட வந்து மத்த பசுக்களயாவது காப்பாத்துங்க" என்று கேட்டுகொண்டார்.

உடனே, நாற்பது ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றும் எனது பணியாளர்.

"'தேவையான எல்லாம் தயாரா எடுத்து வச்சிருக்கேன். இவரு இங்கேருந்து இருபது மைல் தூரத்துல இருக்கற ஒரு கிராமத்தோட பெருந்தனக்காரரோட மகன். இவங்களோட மாடுங்களோட வைத்தியத்துக்கு இங்கதான் வழக்கமா வருவாங்க. அதனால, உடனே இவரோட போய், வைத்தியம் செஞ்சிட்டு, ராத்திரியே திரும்பி வந்துடலாம் அய்யா"

என யோசனை கூறினார்.

அந்த இளைஞரின் பரிதாப நிலை கண்டு, உதவ மனம் எண்ணினாலும், காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக ஏற்பட்ட உடல் அசதி காரணமாகவும், அத்துடன் குளிர் இரவில் சரியான பாதையல்லாத, இருபது ௦மைல் தூரமுள்ள, மின் வசதியும் இல்லாத, அந்த குக்கிராமத்திற்கு சென்று வைத்தியம் செய்துவிட்டு, மறுநாள் காலை ஆறு மணிக்குள் வரமுடியுமா? என்ற சந்தேகத்துடனும், தயக்கத்துடனும், எனது தங்கும் பகுதி நோக்கி, எந்த பதிலும் கூறாமல் நடக்கலானேன்.

எனது தயக்கத்தை புரிந்துகொண்ட எனது பணியாள் என்னை பின் தொடர்ந்து வந்து ,

"ஐயா, இவருடைய தந்தையார், ஒரு படித்த, நாகரீகம் தெரிந்த, உயர்ந்த மனிதராவார். இவரிடம், சுமார் 300௦௦ மாடுகள் உள்ளன. நமது மருத்துவமனைக்கு, பல தடவைகள், பல வகைகளில் உதவியுள்ளார். ஆகையால், நாம், சிரமம் பார்க்காமல், கட்டாயம் போய் வரணும்"

என உரிமையுடன் வேண்டுகோள் வைத்தார்.

"சரி"

என்று கூறிவிட்டு, எனது உடைகளை மாற்றிக் கொண்டு, அந்த இளைஞருடன், அவருடைய காரில் பயணித்தேன்.

காரில் போகும்போதுதான், அந்த இளைஞரிடம்

"பசுக்கள் திடீரென இறக்க, என்ன காரணமாக இருக்கலாமென எண்ணுகிறீர்கள்?"

என வினவினேன்.

அதற்கு அவர்

"எனது தந்தையார் தினந்தோறும் மாலையில் கால்நடைகளுக்கு தீனி இடுவதை மேற்பார்வை இடும்போது வானொலி கேட்பது வழக்கம். இன்று மாலை நிகழ்ச்சி ஒன்றில், கால்நடைகளுக்கு தேவையான புரத சத்துள்ள புண்ணாக்கு போன்ற விலை உயர்ந்த தீவனத்துக்கு பதில், தீவனத்தோடு யூரியா கலந்து கொடுத்தால், கால்நடை வளர்க்கும் செலவு கணிசமாக குறையும்" எனக்கூறக் கேட்டுள்ளார்.

உடனடியாக விவசாய நிலங்களுக்கு போட வாங்கி வைத்திருந்த யூரியா உரமூட்டையில் இருந்து எல்லாப் பசுக்களின் தீவன தொட்டியிலும் ஒரு கைப்பிடி அளவு யூரியாவைக் கலந்துள்ளார். தீவனம் தின்ற சில நிமிடங்களில் அதிகமாக பால் தரும் மூன்று சிந்தி கலப்பின பசுக்கள் வயிறு உப்பி, வயிற்று வலியுடன் கீழே விழுந்து இறந்துவிட்டன. உடனடியாக மற்ற எல்லா மாடுகளும் தீவனம் உண்ணாமல் தடுக்க, தீவன தொட்டிகளை எடுத்து, யூரியா கலந்த தீவனங்கள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுவிட்டது. இருந்தாலும், பல மாடுகளின் வாயிலிருந்து, உமிழ் நீர் ஒழுகிக்கொண்டே இருப்பதோடு, அவை ஒரு வகை பதைபதைப்புடன் காணப்படுகின்றன. ஆகையால்தான், உங்களை அழைத்துச் செல்ல உடனடியாக இங்கு வந்தேன்"

என்று கூறிவிட்டு, காரோட்டியை வேகமாக போகுமாறு உத்திரவிட்டார்.

கார் காரிருளை கிழித்துக்கொண்டு மிக வேகமாக சென்றது.

ஆனால், எனது மனோரதமோ அதைவிட வேகமாக நோயுற்ற கால்நடைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்திக்க தொடங்கியது.

ஏனெனில், அந்த நாட்களில் யூரியாவின் நச்சுத்தன்மை பற்றி, இந்திய கால்நடை மருத்துவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. கல்லூரியிலும் யூரியாவின் நச்சுத்தன்மை பற்றி பயிற்றுவிக்கபடவில்லை.

எந்த கால்நடை மருத்துவ புத்தகங்களிலும் இது பற்றி எதுவும் எழுதப்படவில்லை. அப்போதுதான் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், யூரியாவை கால்நடைகளின் உணவோடு கலந்து கொடுப்பதற்கான ஆரம்பகால ஆராய்சிகள் செய்யப்பட்டு வந்தன. ஆராய்ச்சி முடிவுகளும் முற்றுப்பெறாத நிலை. ஆனாலும், நச்சுப் பொருள் என்னவென்று தெரியாத போது, எவ்வாறு மருத்துவம் செய்வது என்பது பற்றி 'பொது நியதி' (General principles) கல்லூரியில் பாடம் நடத்தப்பட்டிருந்ததால், அதன்படி மருத்துவம் செய்வதென முடிவு செய்தேன்.

சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த கிராமத்தின் நடு நாயகமாக விளங்கிய வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். மிகுந்த துயரத்துடன் அந்த பண்ணையார் எங்கள் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க, அவரை சுற்றி பல ஆட்கள், கையில் லாந்தர் விளக்குடன் நின்றிருந்தனர்.

என்னை பார்த்தவுடன், அந்த பண்ணையார் பேச சிரமப்பட்டு, நா தழுதழுக்க பேசலானார்.

"வாங்க டாக்டர் அய்யா. எல்லாம் என் விதி. எனது மூத்த பண்ணையாள் யூரியாவை போட வேணாம்னு தடுத்தும், என்னோட போதாத காலம். நான் அவனோட பேச்சை கேட்காமல், என் கையாலேயே யூரியாவை போட்டு, அநியாயமா மூணு நல்ல பசுக்கள கொண்ணுட்டேன். இந்த மாவட்டத்துல, விவசாயத்துலயும், கால்நடை வளர்ப்புலேயும் எந்த புது உத்தி வந்தாலும், முதல்ல அதை கடைபிடிப்பவன் அப்படிங்கிற கர்வத்துல, இந்த தவற செய்துட்டேன். நாட்டு மருத்துவ முறைப்படி, அவசர சிகிச்சையா எல்லா பசுக்களுக்கும், முட்டையின் வெள்ளை கருவை பாலில் கலந்து அடிச்சி புகட்டியிருக்கேன். மத்த மாடுகளை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்"

என வேண்டிகொண்டார்.

யூரியா உட்கொண்ட பதினோரு பசுக்களையும் பரிசோதித்தேன்.

சில பசுக்களுக்கு வயிறு சிறிது உப்பி இருந்தது. எல்லா பசுக்களுக்கும் வாயிலிருந்து உமிழ் நீர் வடிந்துகொண்டே இருந்தது. எல்லா பசுக்களும் அசாதாரணமான ஒரு பரிதவிப்போடு நிற்பது தெரிந்தது. அந்த நாட்களில் இப்போது உள்ளது போல் கால்நடை மருத்துவம் செய்ய பல வகையான ஊசி மருந்துகள் கிடையாது. கையில் இருந்த கால்சியம் (Calcium) ஊசியை எல்லா மாடுகளுக்கும் செலுத்தினேன். திரவ மாற்று சிகிச்சை (Fluid therapy) கொடுப்பதென முடிவெடுத்தேன்.

மனிதனுக்கு கொடுப்பதற்கான க்ளுகோஸ் மருந்தே, இப்போது வருவது போல் புட்டிகளில் (Bottle) வராது. இருபது மில்லி கொண்ட கண்ணாடி குமிழ்களில்தான் வெளி சந்தையில் கிடைக்கும். அந்த க்ளுகோஸ் குப்பிகளும் நகரங்களில் மட்டுமே கிடைக்கும். க்ளுகோஸ் ஊசிபோட வேறு வகையில் சிந்தித்தேன். அந்த பண்ணையாரின் வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பு இருந்ததால், நிறைய இளநீர் காய்களை பறித்து வரச்சொல்லி, அதில் இருந்த இளநீரை சேகரித்து, எல்லா பசுக்களுக்கும் தலா ஐநூறு மில்லி வீதம் சிறை வழியாக (i/v) இரத்தம் மூலம் செலுத்தினேன். பிறகு, யூரியாவின் காரத்தன்மையை குறைக்க, ஒவ்வொரு பசுவுக்கும் ஐம்பது எலுமிச்சை பழங்களை பிழிந்து, அந்த சாரை உள்ளுக்கு புகட்டினேன்.

காலை மருந்துக்கடை திறந்தவுடன் strnacin மாத்திரை வாங்கி அந்த பசுக்களுக்கு தலா நான்கு மாத்திரைகள் வீதம் வாய் மூலம் உள்ளுக்கு கொடுக்குமாறு கூறி சீட்டு எழுதி கொடுத்துவிட்டு, பிறகு அங்கிருந்து கிளம்பி, அதிகாலை நான்கு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.

அதேபோல மாத்திரைகளை வாங்கி கொடுத்திருந்தார்கள்.

மறு நாள் மாலை நான் சென்று பார்த்தபோது, எல்லா பசுக்களும், எவ்வித நோய்குறிகளும் இன்றி, நன்றாக இருந்தன.

இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால், எந்த ஒரு புதிய தொழில் நுட்பமோ அல்லது மருத்துவ முறை பற்றியோ தெரிய வந்தால், தகுந்த, தகுதி வாய்ந்தவர்களின் ஆலோசனை இன்றி, உடனே தானே அதை செயல்படுத்த முயன்றால் இது போன்ற சிக்கல்கள் வரும் என்பதை உணர்த்தவே.

மேற்கண்ட நிகழ்ச்சியில் அந்த பண்ணையார் வானொலி நிகழ்ச்சியை கேட்டவுடன், அதை செயல்படுத்தவேண்டும் என்ற அதீத ஆர்வமுடன் செயல்பட்டதால்தான், விலைமதிப்பு மிகுந்த தனது பசுக்களை இழக்க நேரிட்டது. அவரே, செய்தி கேட்ட பிறகு, தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரை அணுகி, இது பற்றி கேட்டிருந்தால், கால்நடை மருத்துவர் அவருக்கு, தீவனத்தில் யூரியாவை எப்படி கலக்க வேண்டும் என்பது பற்றிய நுணுக்கங்களை சொல்லி கொடுத்திருப்பார்.

கடந்த 1974 ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு பிரச்சினை ஒன்று வெடித்தது. மாயூரத்தை சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தினரின் பண்ணையில், பெரிய நிறுவனம் ஒன்று தயாரித்த யூரியா கலந்த தீவனம் உட்கொண்ட மாடுகள் சில திடீரென இறக்க, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தீவனத்தை உரிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில், தீவனத்தில் யூரியா சரியான முறையில் கலக்கப் படவில்லை. அதன் காரணமாகவே, தீவனம் உட்கொண்ட பசுக்கள் இறந்தன என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

எனவே, அக்குடும்பத்தினர் அந்த தீவன தயாரிப்பு நிறுவனத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றனர். தீவன தயாரிப்பு நிறுவனமோ உலகப் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனம். ஆகவே, இதை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை. அந்த குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை குறுக்கு வழிகளில் முடக்க முயன்றனர். ஆனால், அந்த குடும்பத்தினர் நல்ல படித்த, விவரம் தெரிந்தவர்கள். எனவே, சட்டபூர்வ நடவடிக்கைகளை குலைக்க நிறுவனம் எடுக்கும் தவறான முயற்சிகளை, அப்போது போலீஸ் உயரதிகர்ரியாக இருந்த காலஞ்சென்ற திரு. அருள் அவர்களிடம் எடுத்துரைத்து, நியாயம் கிடைக்கவில்லை எனில் உச்ச நீதிமன்றம் வரை போவோம் என சொல்ல, திரு.அருள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அந்நிறுவனம் பின்வாங்கி, தனது தவறை ஒத்துகொண்டது. அவர்கள் எழுது பூர்வமான மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின்பே, அக்குடும்பத்தினர் அப்பிரச்சினையை முடித்தனர்.

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள், “அதீத ஆர்வம், ஆபத்தை விளைவிக்கும்என்று.

Monday, March 29, 2010

ஓட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்தம்

சுமார் 50 வருடங்களுக்கு முன், இரத்த அழுத்த நோய் பற்றி சாதாரண மக்கள் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அனால் இன்று அதிகம் படிப்பறிவு இல்லாத கிராம மக்கள் கூட, இரத்த அழுத்த நோய் பற்றி ஓரளவு தெரிந்து வைத்துள்ளார்கள். மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கு வரும் இரத்த அழுத்த மாற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள, இயற்கை அவைகளுக்கு அளித்துள்ள கொடை (Natures’ Gift) மருத்துவம் படித்தவர்களுக்குக்கூட இன்றுவரை தெரியாது.

இப்பூவுலகில் வாழும் இரண்டாவது மிகப்பெரிய மிருகமான ஒட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்த மாற்ற வினோதங்கள் பற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் கூட சிலர் மட்டுமே.



டார்வினின் பரிணாம வளர்ச்சி (Darwin’s Theory on Evolution) தத்துவப்படி, மர உச்சியிலுள்ள தழைகளையும், இலைக்கொழுந்து களையும் தின்பதற்கு, வசதியாக நீண்ட கழுத்தை ஒட்டச்சிவிங்கிக்கு இயற்கை அளித்திருந்தாலும், அதன் கழுத்து முள்ளெலும்பு (Cervical Vertebra) மனிதனுக்கு உள்ளது போல ஏழு மட்டுமே. ஒவ்வொரு கழுத்து முள் எலும்பும் 11” நீளமுடையவை ஆகும். இதனால், ஒட்டச்சிவிங்கிகளின் மூளை, அதன் இதயத்தில் இருந்து சுமார் 2 மீட்டர் தூரத்திற்கு அப்பால் (8 - 10 அடி) அமைந்துள்ளது. இதுபோலவே, மனிதனுக்கு அமைந்திருந்தால், மூளைக்கு போதுமான இரத்த ஓட்டமின்றி, அவனுக்கு தலைவலி வந்துவிடும். அனால், ஒட்டச்சிவிங்கிக்கு எந்த நோயுமில்லையே? ஏன்? இயற்கை அன்னை அளித்துள்ள சிறப்பு உடற்கூறு என்ன?

ஒரு மனிதனுடைய சராசரி இரத்த அழுத்தம் 120/70 என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒட்டச்சிவிங்கியின் இரத்த அழுத்தம் எவ்வளவு தெரியுமா? 300/200௦௦. உலகிலுள்ள எல்லா விலங்குகளையும் விட அதிக இரத்த அழுத்தம் ஒட்டசிவிங்கிக்கு மட்டும்தான். உலகின் மிகப்பெரிய விலங்கான யானைக்குக் கூட 178/118 தான் இரத்த அழுத்தம். இவ்வளவு அதிகமான இரத்த அழுத்தம் இருப்பதால்தான், ஒட்டச்சிவிங்கியின் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்கிறது. அதிக இரத்த அழுத்தம் மூளைக்கு நன்மை செய்தாலும், இதயத்தின் கீழ் பகுதியான கால்களுக்கு தீமை செய்யும் வாய்ப்புள்ளது. ஏன்? சில சமயங்களில் மூளைக்குமே தீங்கு நேர வாய்ப்புள்ளது.

முதலில் அதிக இரத்த அழுத்தம் ஒட்டச்சிவிங்கிகளுக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு மனிதனின் இதயம் இரத்தத்தை பீய்ச்சி (pumping) வெளியேற்றுவது போல, ஒரு ஒட்டச்சிவிங்கியின் இதயம் இயங்கினால், போதுமான இரத்த அழுத்தமின்றி மூளைக்கு தேவையான இரத்த அழுத்தமும், பிராண வாயுவும் போய் சேராது. ஆகையால், அதிகமான இரத்த அழுத்தம் தரக்கூடிய தன்மையுள்ள இதயம் தேவை. அவ்வளவு அதிக திறன் கொண்ட 2 அடி நீளமும், 3” இன்ச் தடிமனுள்ள 10௦ கிலோ எடையுள்ள இதயத்தை, (மனித இதயத்தைவிட 40௦ மடங்கு பெரிதான) இயற்கை ஓட்டச்சிவிங்கிக்கு அளித்துள்ளது. பொதுவாக, சிறிய விலங்குகளுக்கு ஒரு நிமிடத்துக்கு அதிக இதயத்துடிப்பும் (கன்றுகுட்டிக்கு 170/140)) பெரிய விலங்குகளுக்கு குறைவான (பசு – 40/60௦, யானை – 25/30௦) இதயத் துடிப்பும் இருப்பது நியதி. ஆனால், இரண்டாவது பெரிய விலங்கான ஒட்டச்சிவிங்கிக்கு மட்டும் ஒரு நிமிடத்துக்கு 170 இதய துடிப்பை அளித்திருப்பது இயற்கையின் வினோதமாகும். இவ்வாறு பெரிய இதயத்தையும், ஒரு நிமிடத்துக்கு அதிக இதயத்துடிப்பையும் பெற்று இருப்பதால்தான் ஒட்டச்சிவிங்கியின் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்கிறது.

இயற்கையில் ஒட்டச்சிவிங்கிகளை கொல்லும் எதிரிகள் இருவர். ஒன்று மனிதன். மற்றுஒன்று சிங்கம். ஆனால், தீவனம் தின்று கொண்டோ, நின்றுகொண்டோ இருக்கும் ஒட்டச்சிவிங்கியை அவ்வளவு சுலபமாக சிங்கங்களால் கொல்ல முடியாது. ஏனெனில், ஒட்டச்சிவிங்கிகள் சுமார் 3 மைல் தூரம் பார்க்கும் திறனும், கூர்மையான கேட்கும் திறனும் உடையவை. அவை பின்னங்கால்களால் உதைத்தால், ஒரு சிங்கம் தலை சிதறி இறக்க நேரிடும். எனவே, சிங்கங்கள், ஒட்டச்சிவிங்கிகள் தண்ணீர் அருந்தும் இடங்களில்தான், பதுங்கி இருந்து தாக்கும்.




ஏனெனில், , ஒட்டச்சிவிங்கியின் முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிட நீளமாக இருப்பதாலும், கழுத்து நீளமாக இருப்பதாலும், பிற விலங்குகள் போல், அவற்றால், சுலபமாக தண்ணீர் குடிக்க முடியாது. எனவே, அவை குனிந்து, தண்ணீர் குடிக்க ஏதுவாக முன்னங்கால்கள் இரண்டையும் 45o பாகை அகற்றி வைத்து, தலையை இதயத்தின் மட்டத்திலிருந்து 7 அடி கீழ் நோக்கி கொண்டு வந்து, குனிந்து, சிரமத்துடன்தான் தண்ணீர் குடிக்க முடியும். நன்கு வளர்ந்த ஒரு ஒட்டச்சிவிங்கியின் சராசரி உயரம் 16 அடி ஆகும். ஆண் ஒட்டச்சிவிங்கி 18 அடி உயரம்கூட வளரும். ஒட்டச்சிவிங்கி தண்ணீர் அருந்தியபின், 2 வினாடிகளில் தரைப்பகுதியில் இருந்து தலையை 15-18 அடி உயரத்திற்கு தூக்கி விடும் திறன் கொண்டவை. இது போல் ஒரு மனிதன் தனது தலையை, மிகவிரைவாக குனிந்து தூக்கினால், உடனடியாக அவன் மயக்கமடைவான். ஆனால், ஒட்டச்சிவிங்கிகளுக்கு, எந்த வித பாதிப்பும் ஏற்படாததற்கு, முக்கிய காரணம் இயற்கையாக அமைந்துள்ள அதன் கழுத்தின் உள்ளமைப்பும் (Anatomy), மற்றும் அதன் உடல் இயங்கும் திறனும்தான் (Physiological function). தலை நிமிர்ந்து நிற்கும் போது, 300௦௦ இருக்கும் இரத்த அழுத்தம் அது தலையை குனிந்து தண்ணீர் குடிக்கும்போது 175 ஆக குறைந்துவிடும்.



இதயத்திலிருந்து, மூளைக்கு, இரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரசுத்தமானி (Carotid artery) தடிப்பாகவும், விரைப்பாகவும் (rigid) இருக்கும். அனால், மூளைக்கு அருகில் செல்லுமிடத்தில், ஒரு பகுதி, நெகிழும் தன்மையுள்ள ஒரு வலைபின்னல் (Retemirabile) போல் அமைந்திருக்கும். மறு பகுதி நேராக மூளைக்குச் செல்லும். அவ்வாறு அமைந்திருப்பதால், தலையைத் தாழ்த்தி, நீர் அருந்தும்போது, இதயத்திலிருந்து செல்லும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் இந்த வலைப்பின்னல் விரிவடைவதால், குறைந்துபட்டு (175) மூளையை பாதிப்பதில்லை. அத்துடன், தலை நிமிர்ந்திருக்கும்போது, தலை மேலிருந்து, இரத்தத்தை, திரும்ப இதயத்திற்குக் கொண்டு செல்லும் கழுத்துச் சிரை (jugular vein) 1" விட்டமும், நெளியும் திறனோடு (hose like) ஒரு வழித் தடுப்பு இதழோடும் (valves) அமைந்திருப்பதால், தலையைக் குனியும் போது, மூளைக்கு அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஒட்டச்சிவிங்கியின் கழுத்தில் அமைந்துள்ள, சிறப்பு அமைப்பு, பிற விலங்குகளுக்குக் கிடையாது.

இந்தச் சிறப்பு அமைப்போடு, மற்றுமொறு சிறப்பு அமைப்பும் ஒட்டச்சிவிங்கிக்கு உண்டு. அவை நின்றுகொண்டிருக்கும்போது, தேவையான குருதியை மூளைக்கு கொண்டுசெல்ல, அதிக அழுத்தத்துடன் இதயம், குருதியைப் பீய்ச்சுகிறது (pump). அவ்வாறு அதிக அழுத்தத்தோடு பீய்ச்சப்படும் இரத்தம், கீழ்நோக்கி, கால்களுக்கு செல்லும்போது, அந்த இரத்த அழுத்தத்தை தாங்கமுடியாமல், காலிலுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படும். அவ்வாறு, ஒட்டச்சிவிங்கிகள் பாதிக்கப் படாமல் இருக்க, அதன் கால்களின் தோல், கால் எலும்புகளுடன் மிக இறுக்கமாக ஒட்டியிருக்கும். அதனால், அதன் கால்கள், அதிக இரத்த அழுத்தத்தால் பாதிப்பதில்லை. ஒட்டச்சிவிங்கிகளின், இந்த கால் அமைப்பைப் பார்த்தே, விண்வெளி செல்லும் வீரர்களின் கால்கள், இரத்த அழுத்த வேறுபாடால் பாதிக்கப்படாமல் இருக்கத்தக்க உடையான (G Suite) தயார் செய்யப்பட்டுள்ளது.

இயற்கைதான் எத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது !