Friday, May 29, 2009

திரும்பிப் பார்க்கிறேன்-3

"இயற்கை தாய் அளித்துள்ள தற்காப்புத் திறன் "

எல்லா உயிரினங்களுக்கும், தங்கள் உடலில் நோய்களை தோற்றுவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria) மற்றும் நச்சுயிரிகளுக்கு (Virus) எதிராக மட்டுமே நோய் எதிர்ப்பு புரதத்தை (Antibodies) உடலில் உற்பத்தி செய்து தங்களை காத்து கொள்ள முடியும்.

ஆனால், தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக, எந்த உயிரினத்தாலும் நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் உற்பத்தி செய்து, சாவிலிருந்து தன்னை காத்து கொள்ள முடியாது. இந்த நியதிக்கு, விதி விலக்காக, மூன்று தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு புரதத்தை உற்பத்தி செய்ய, இயற்கை வழி வகுத்துள்ளது.

அந்த மூன்று தாவரங்களில் ஆமணக்கும் ஒன்றாகும்.

மற்ற மாவட்ட விவசாயிகள் போல, காவிரியின் கடை மடை பகுதியிலுள்ள விவசாயிகள் ஆமணக்கை பணப் பயிராக பயிரிடுவதில்லை. அனால், சிலர் ஓரிரு செடிகளை மட்டும் தங்கள் தோட்டங்களில் வளர்ப்பது அல்லது வளர விடுவது உண்டு.

புஞ்சை பயிர் அதிகம் பயிராகும் வானம் பார்த்த பூமியை கொண்டுள்ள மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஆமணக்கு செடிகளை தங்கள் நிலத்தை சுற்றி, வரப்பு ஓரங்களில், இலாப நோக்கோடு பயிரிடுவார்கள். ஆமணக்கு இலைகளில் ரெசின் என்ற நஞ்சு அதிக அளவில் இருக்கும் என்பதை நாம் முன்பே கண்டோம். ஆகவே, நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க வரும் பூச்சிகள், வரப்பு ஓரம் உள்ள ஆமணக்கு இலைகளை முதலில் தின்று, இறந்துவிடுவதால், நிலத்தில் பயிரிடப்படும் மற் பயிர்கள், பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றன. இந்த இயற்கை முறை விவசாயத்தால், உயிர்கொல்லி (Pesticide) மருந்துக்கு செலவு செய்யாமலே, விவசாயிகள் அதிக இலாபம் ஈட்ட முடியும்.

எங்கள் மாவட்டத்தில் (தென்னார்க்காடு) இந்த இயற்கை முறை விவசாயத்தை அப்போது எல்லோரும் கடை பிடித்தார்கள். இந்த நிலங்களில் மேய வரும் ஆடுகள் முதலில் வரப்பு ஓரங்களில் ஓரிரு ஆமணக்கு இலைகளை தின்ற உடனேயே, காவலில் இருப்போரால் விரட்டி அடிக்கப்படும். அதனால், அவை அதிக அளவு இலைகளை உண்ணும் வாய்ப்பை இழப்பதால், அவை இறந்து விடாமல் தப்பித்துவிடும். அதே நேரத்தில் சிறிது அளவு இலைகளை தின்ற ஆட்டின் உடலில் ரெசின் நஞ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பு புரதம் உற்பத்தியாகிறது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நேர்வதால், எண்கள் பகுதியில் உள்ள ஆடுகளின் உடலில் தேவையான அளவு ரெசின் நஞ்சை முறிக்கும் எதிர் புரதம் உற்பத்தி ஆவதால், அதிக இலைகளை தின்ன நேர்ந்தாலும், ஆடுகள் இறந்து விடாமல் இயற்கை காப்பாற்றுகிறது.

ஆமணக்கை பயிரிடாத, காவிரி கடைமடை பகுதியில் வாழும் ஆடுகளுக்கு, ஆமணக்கு இலையை தின்னும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆகையால், அவற்றின் உடலில் ரெசின் நஞ்சை முறிக்கும் நோய் எதிர்ப்பு புரதம் இயற்கையில் இருப்பதில்லை. சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள ஆமணக்கின் கிளைகளை வெட்டி பாதை ஓரங்களில் எறிவதுண்டு. அவ்வாறு எறியப்படும் கிளைகளில் உள்ள இலைகளை அப்பாதை வழியே செல்லும் அப்பகுதி வாழ் ஆடுகள் வயிறு நிறைய தின்றால், அவை இறந்துவிடும்.

இந்த நஞ்சை முறிக்க, மனிதனின் ரத்த ஜன்னி நோயை (Tetanus) குணப்படுத்த, குதிரையில் இருந்து ஊனீர் (Serum) தயார் செய்வது போல, ஆமணக்கு இலைகளை சிறிது அளவில், பல நாட்கள் ஆட்டுக்கு கொடுத்து, போதுமான அளவு நோய் எதிர்ப்பு புரதம் அதன் உடலில் உற்பத்தி ஆனா பின், அதன் ஊநீரை எடுத்து, பாதிக்கப்பட்ட ஆட்டுக்கு கொடுத்தால்தான், அதை காப்பாற்ற முடியும். இந்த மருந்தின் தேவை மிக குறைவு என்பதாலும், இதை தயாரிக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்பதாலும், இலாப நோக்கு கொண்ட எந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமும் நம் நாட்டில் இதை தயார் செய்ய முன்வராது. இந்த மருந்து இல்லாமல் ஆமணக்கு இலையை தின்னும் தஞ்சை மாவட்ட ஆடுகளை இன்றும் யாராலும் காப்பற்ற முடியாது.

ஆனாலும், இலையை உண்ட உடனேயே, வேறு சில மருத்துவ முறைகளை கடை பிடித்து, தீவிர சிகிச்சை அளித்தால், ஆட்டை காப்பற்ற முடியும். அனால், அதற்கு, அனுபவம் நிறைந்த கால்நடை மருத்துவரும், எல்லா வசதிகளும் கொண்ட கால்நடை மருத்துவ மனையும், மருத்துவரோடு முழு மனதோடு ஒத்துழைக்கும் ஆட்டு உரிமையாளரும் தேவை.

சென்னை பல்கலைகழகத்தில் கால்நடை மருத்துவ பட்டம் பெற்ற எனக்கு,

(1) ஏன் அன்று இந்த விபரங்கள் தெரியாமல் போயிற்று?
(2) ஏன் இன்றும் எல்லா கால்நடை மருத்துவமனைகளிலும், இதற்கு மருத்துவம் செய்ய முடியவில்லை?

இதற்கான விளக்கத்தை எனது அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.

Tuesday, May 26, 2009

திரும்பிபார்க்கிறேன்- 2





அழகு இருக்கும் இடத்திலே, ஆபத்து இருக்கும் மறைவுலே


ஆமணக்கு செடி பற்றியும், அதன் நச்சுத்தன்மை பற்றியும் தெளிவாக அறிந்தால்தான் ஆமணக்கு இலைகளை தின்ற தஞ்சை மாவட்ட ஆட்டுக்குட்டி மட்டும் ஏன் இறந்தது என்பது விளங்கும்.

பொதுவாக, கிராமங்களில் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுத்து (Castor Oil), அதை குழந்தைகளுக்கு மலமிளக்கியாக (laxative) கொடுப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த எண்ணெய் விளக்கு எரிக்க பயன்படுத்தப் பட்டதால், இதை விளக்கெண்ணை என்றே அழைப்பார்கள். ஆனால், இன்று பல தொழிற்சாலைகள் இதை மூல பொருளாக வைத்து பல வித தொழில்கள் இயங்க தேவையான பொருள்களை தயார் செய்கிறார்கள். ஆனால் எண்ணெய் எடுத்தபின் மிச்சமிருக்கும் கழிவு பொருளிலுள்ள நச்சு தன்மை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

[Photo]ஆமணக்கு செடி வெப்ப மற்றும் மித தட்ப வெப்ப பகுதிகளில் வளரும், பூக்கும் வகை சேர்ந்த தாவரமாகும். இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியா (Ethiopia) பகுதி என்று சில குறிப்புகள் கூறினாலும், கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கல்லறைகளில் ஆமணக்கு விதைகள் கண்டெடுக்க பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். கி மு 1552 ஆம் ஆண்டு எழுதப் பட்டதாக கருதப்படும் ஈபர்ஸ் பேபிரஸ் (Eber's Papyrus) என்ற மருத்துவ சுவடியில், ஆமணக்கின் மலமிளக்கும் மருத்துவ குணம் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது. உலக பேரழகி கிளியோபாட்ரா (Cleopatra) தன் கண் அழகை கூட்ட ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆமணக்கு செடி யாரும் பயிர் செய்யாமலே, பயனற்ற நில[Photo]ங்களிலும், தண்ணீர் தேங்காத ஆற்று படுகைகளிலும் அதிகம் காணப்படும் தாவரமாகும். இதன் பூக்கள் பற்பல வண்ணங்களில் உள்ளதால், கனடா போன்ற நாடுகளில், பூங்கா மற்றும் பங்களா போன்ற இடங்களில் அலங்கார செடிகளாக வளர்க்க படுகின்றன. ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் இதை வர்த்தக நோக்கோடு பணப் பயிராக பயிர் செய்கிறார்கள். உலக நாடுகளில் ஆமணக்கு விதைகளை மிக அதிக அளவில், அதாவது ஆண்டுக்கு சுமார் 8,30,000 டன் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்.



ஆமணக்கு செடியின் இலை, அதன் விதை மற்றும் எல்லா பாகங்களிலும் ரெசின் (Ricin) என் நச்சுப் புரத வகையை (Toxalbumin) சேர்ந்த மிக கொடிய நஞ்சு உள்ளது. இந்த நஞ்சு, எல்லா உயிரினங்களையும் கொல்லும் நஞ்சு[Photo]களின் வரிசையில் முதல் இரண்டு நஞ்சுகளில் ஒன்றாகும்.
இந்த நஞ்சு, நல்ல பாம்பின் நஞ்சைவிட இரு மடங்கும், சயனைடைவிட (Cyanide) 6000 மடங்கும் கொடியதாகும். ஒரு மனிதனை கொல்ல 0.035 கிராம் ரெசின் போதும். ஒரு ஆமணக்கு விதை ஒரு குழந்தையை கொல்ல போதுமானதாகும். ஆனால் அதிஷ்ட வசமாக இந்த நஞ்சு எண்ணையில் கரையும் தன்மை இல்லாததாலும், நம் கிராமங்களில் ஆமணக்கு எண்ணெய் அடுப்பில் காய்ச்சி தயாரிக்கப் படுவதாலும், விளக்கெண்ணையில் இந்த நஞ்சு இருப்பதில்லை.

தற்போது இந்த நஞ்சு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும், புற்று நோய் மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தவும் உபயோகப் படுகிறது. ஆனால், துரதிஷ்ட வசமாக, முதலாம் உலகப் போரில் உபயோகிக்க இந்த நஞ்சு நிரம்பிய ரசாயன குண்டுகளை தயார் செய்தார்கள். இதன் மிக கொடிய அழிவு திறனை எண்ணி, நல்ல காலமாக அவைகளை உபயோகப் படுத்தவில்லை.

பயங்கரவாதமும், குடை குண்டும்


ரெசின் என்ற இந்த நஞ்சை, ஆமணக்கு செடி மற்றும் விதையிலிருந்து பிரித்து எடுத்து பொடியாக்கி (powder) காற்றில் தூவியோ, குடி தண்ணிரில் கலந்தோ அல்லது ஊசி மூலமாகவோ செலுத்தியோ மனித உயிர்களையும் மற்ற உயிரினங்களையும் சுலபமாக அழிக்க முடியும். இந்த நஞ்சுக்கு, முறிவு மருந்து (antidote) ஏதும் இல்லாததால், இந்த நஞ்சால் பாதிக்கபடுகின்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகக் கடினம். இப்போது இந்த நஞ்சை, பல தீவிரவாத இயக்கங்கள், உயிரியல் தீவிரவாத (Bioterrorism) நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் ஜியார்ஜி மார்கோவ் என்பவரின் கொலை. அரசின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து கொண்ட பல்கேரிய நாட்டின் பத்திரிக்கையாளர் ஜியார்ஜி மார்கோவ் (Georgi Markov) என்பவர். அவர் அந்நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வாழ்ந்து வந்தார். ரெசின் நஞ்சை கண்ணுக்கு தெரியாத சிறு குண்டுகளாக செய்து, குடை முனையில் அவற்றை வைத்து, பேருந்துக்காக காத்து நின்ற மார்கோவை, தற்செயலாக குடையால் இடிப்பது போல், காலில் குத்தி கொலை செய்தார்கள். இது நடந்தது 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள். இந்நிகழ்வு பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைப்பகுதிகளுக்கு செல்லவும்.


இதே போல 1980 ஆம் ஆண்டு, ஈரான், ஈராக் சண்டையில் இதை பயன்படுத்தியதாகவும், ஆப்கானிஸ்தானில் அல் குவைதாவினர் இருந்த குகைகளில் இருந்து இந்த நஞ்சு கண்டெடுக்கப் பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனாலும், மற்ற தாவரங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை ஆமணக்கு செடிக்கு இருப்பதால், இந்த நஞ்சை முறிக்கவோ, இந்த நஞ்சால் பாதிப்பு வராமல் காக்கவோ, அல்லது வாழ்வு முறை மாற்றம் மூலம், இயற்கையிலேயே, உடலில் எதிர்ப்பாற்றலை நம்மால் உண்டாக்கவோ முடியும்.

அது பற்றி அடுத்த இடுகையில் விளக்குகிறேன்.




Wednesday, May 20, 2009



எனது எண்ணங்கள்


வலைப்பதிவில் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதுமாறு பல நண்பர்கள் கூறிவந்தனர். தொடர்ந்து எழுத நேரமின்மையலும், என்னுடைய அனுபவங்கள் ஒரு குறுகிய வட்டத்திலுள்ள ஒரு சிலரே ஆர்வத்துடன் படிப்பார்கள் என்பதாலும் எழுத தயங்கினேன். எனது "கால்நடைமருத்துவனின் காலடிச்சுவடு " என்ற புத்தகத்தை படித்த பல ண்பர்கள் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும் கட்டாயம் பதிவு செய்யுமாறு வேண்டினர். தஞ்சை மாவட்டத்தில் கால்நடைமருத்துவனாக வாழ்க்கையைத்துடங்கி பல்கலைகழக துணைவேந்தராக ஓய்வு பெற்ற நான் எனது வாழ்வில் சந்தித்த பல நிகழ்வுகள் பற்றியும் அதனுடன்

சம்பந்தபட்ட பல விதமான மனிதர்கள் பற்றியும் எனது எண்ண ஓட்டங்களை எனது

டுகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி யுள்ளேன்.


எனது

தொழில்துறையின் வளர்ச்சிக்காக எனது ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களையும், கால்நடைகள் பற்றிய சில அறிவியல் உண்மைகளையும் தெரிவிப்பதே எனது நோக்கம்.


Tuesday, May 5, 2009

திரும்பிப்பார்க்கிறேன்-1

அன்றைய தஞ்சை மாவட்டத்திலிருந்த திருவெண்காட்டில் அரசு கால்நடை மருத்துவமனையை முதன் முதலாக தொடங்கியதோடு, எனது அரசு பணியையும் தொடங்கிய முதல் நாளன்று என்னிடம் சிகிச்சைப்பெற கொண்டுவரப்பட ஆட்டுக்குட்டியையும் , அதையொட்டி நடந்த நிகழ்வுகளையையும் என்னால் இன்றும் மறக்கமுடியவில்லை. அந்நிகழ்வே பின்னாளில், பலரும் படிக்க தயங்கிய நோய்த்தீர்ப்பியலை (Clinical Medicine and Therapeutics) எனது மேற்படிப்புக்கு தேர்வு செய்ய துண்டுகோலாக அமைந்தது.

அன்றைய திருவெண்காடு, சிறிய உணவகம் மற்றும் மின்சாரம் கூட இல்லாத ஒரு சிற்றூர் ஆகும். சீர்காழியில் பயிற்சிக்குச் சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ளேயே திருவெண்காட்டில் திறக்கவிருந்த மருத்துவமனைக்கு என்னை மாற்றி உத்தரவு வந்தது. அத்துடன், சீர்காழி மருத்துவமனையிலிருந்து திருவெண்காடு மருத்துவமனைக்கு முதலுதவிக்கு தேவையான சில மருத்துகளை பெற்றுக்கொள்ளு மாறும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அன்று , திருவெண்காட்டில் கால்நடை மருத்துவமனைக்கென்று தனி கட்டடம் இல்லாததால், ஊராட்சி மன்றத்தலைவரின் வீட்டின் எதிர்புறமிருந்த ஒரு கடையில், தற்காலிகமாக மாவட்ட அதிகாரியால் 1959, ஆகஸ்ட் மாதம், 3 ம் தேதி, கால்நடை மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது. ஒரு வாரமே பயிற்சிபெற்ற நான் எந்தவித மருத்துவக்கருவிகளுமின்றி, சீர்காழி மருத்துவர் கொடுத்த ஓரிரு மருந்துகளுடன் எனது முதல் நாள் பணியைத்தொடங்கினேன்.

திறப்பு விழா முடிந்து, மாவட்ட அதிகாரியும், மற்றவர்களும் சென்றபின், எனது எண்ணம் முழுதும், இந்த வசதியில்லா ஊரில், எங்கு தங்குவது? எங்கு சாப்பிடுவது? என்பதாகவே இருந்தது அப்பொழுது, பக்கத்துக்கு கிராமத்திலிருந்து ஒருவர் , ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சைக்கிளில் வைத்து , மருத்துவம் செய்ய கொண்டுவந்தார். "டாக்டர் அய்யா, இந்த ஆட்டுக்குட்டி, பக்கத்துக்கு தோட்டத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட ஆமணக்கு இலைகளை தின்றுவிட்டது. உடனடியாக ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று வேண்டினார்.

நான் பழைய தென்னாற்காடு மாவட்டதைச்சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில், புஞ்சை நிலங்களில், கடலைப்பயிருடன் ஊடு பயிராக கம்பு, துவரை மற்றும் ஆமணக்கு பயிர் இடுவதுண்டு. அவ்வாறு பயிர் இடப்பட்ட நிலங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், ஆமணக்கு இலைகளை தின்பதை, சிறு பையனாக பார்த்திருக்கி்றேன். அவ்வாறு தின்னும் ஆடுகளை விரட்டியோ அல்லது பிடித்து பட்டியில் அடைத்தோ விடுவார்கள். எனக்கு தெரிந்து எந்த ஒரு ஆடும் இறந்ததில்லை.

நான் கல்லூரியில் படித்தபோது ஆமணக்கு இலையை கால்நடைகள் உண்டால் கேடுவருமென்று யாரும் கூறவில்லை. ஆகையால், "ஆமணக்கு இலையை தின்றதால் ஆபத்து ஒன்றுமில்லை. அதற்கு எந்த வைத்தியமும் தேவையில்லை" என்று கூறினேன்.

ஆனால், அந்த விவசாயியோ, " இல்லை அய்யா, ஆட்டுக்குட்டி இறந்துவிடும். ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்." என்று திரும்ப, திரும்ப வலியுறுத்தினார். நான் எனது கிராமத்தில் கண்ட அனுபவத்தை கூறி , "ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது " எனக்கூறி எந்த வைத்தியமும் செய்யாமல் அனுப்பிவைத்தேன்

காலை அலுவல் நேரம் முடிந்தவுடன், உள்ளூர் கோவிலிலிருந்து அனுப்பட்ட பிரசாதத்தை மதிய உணவாக உண்டபின், இரவு எங்கு தங்குவது எண்ணதிலேயே மூழ்கி,மருத்துவமனையில் உட்கார்ந்திருந்தேன். காலையில் வந்த விவசாயி சைக்கிளின் பின் ஒரு கூடையை வைத்துக்கொண்டு மறுபடியும் வந்து நின்றார். அந்த கூடையிலிருந்து இறந்த ஆட்டுக்குட்டி ஒன்றை எடுத்து வந்து " டாக்டர் அய்யா, காலையில் பலமுறை கேட்டும், வைத்தியம் செய்யாமல் ,
ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அனுப்பி வைத்தீர்கள் . இப்பொழுது பாருங்கள் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது." என்று கூறி விட்டு எனது பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்று விட்டார்.

எங்களூரில் ஆமணக்கு இலையைத்தின்ற பல ஆடுகளில் ஒன்று கூட இறக்காதபோது ஏன் இந்த ஆட்டுக்குட்டி மட்டும் இறந்தது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.அந்த மாவட்டத்தில் வேலை செய்த பல மூத்த கால்நடை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான விளக்கத்தை யாரிடமிருந்தும் என்னால் பெறமுடிய வில்லை. பின்னாளில், சிறப்புப் பயிற்சி பெற (Specialization) படிக்கும் போது தான் , மேலைநாட்டு வல்லுனர்களின் கட்டுரைகளிலிருந்து, அந்த ஆட்டுக்குட்டி இறந்த காரணத்தை அறிந்தேன். அது பற்றி அடுத்த இடுகையில்