Wednesday, September 2, 2009

திரும்பிபார்க்கிறேன்- 5

அந்நாட்களில் அரசு சட்ட திட்டங்கள் மிக கடுமையானவை. அரை நாள் தற்செயல் விடுப்பு எடுக்க வேண்டுமானாலும், மாவட்ட அதிகாரிக்கு மனு செய்து, அவர் மாற்று ஏற்பாடாக வேறு ஒருவரை அனுப்பி, அவர் வந்து பதவி ஏற்றபின் தான் விடுப்பில் செல்ல முடியும். அது போல மருத்துவமனைக்கும் வேலை நேரததில் ( திங்கள் முதல் சனி வரை - காலை 8 மணி முதல் 12 மணி மணி வரை, மாலை 3 முதல் 5 வரை, ஞாயிறு, காலை 8 முதல் 12 வரை) எக்காரணம் கொண்டும் தாமதமாக வரவோ, அல்லது மருத்துவமனை மூட வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவோ செல்ல முடியாது. எவ்வளவு அவசரமானாலும், மருத்துவமனை நேரத்தில், மருத்துவமனையை விட்டு சொந்த வேலைக்காகவோ, வெளியில் மருத்துவம் செய்யவோ போகமுடியாது. அவ்வாறு யாராவது வெளியே சென்றிருக்கும் போது, மேலதிகாரிகள் வந்துவிட்டால் கால்நடை மருத்துவரின் பாடு திண்டாட்டமே. எங்கள் மாவட்டத்திலேயே ஒரு கால்நடை மருத்துவர் பஞ்சாயத்து போர்டு மாட்டிற்கு (Conservancy Bullock ) வைத்தியம் செய்துவிட்டு பிற்பகல் பணிக்கு மதியம் 3.05 க்கு வந்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

மாயவரத்தில் நான் பணியில் இருந்தபோது தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை முனிசிபல் ஆட்டு இறைச்சி அறுவை கூடத்தை (Slaughter House) மேற்பார்வை இடவேண்டும். பிறகு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மருத்துவ பணிகளை கவனிக்க வேண்டும். காலை 6 மணிக்கு சென்று, இறைச்சிக்காக கசாப்பு கடைக்காரர்கள் கொண்டு வரும் ஆடுகளை சோதனை செய்து, இறைச்சிக்கு தகுதியான ஆடுகளின் வாலில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும். அவ்வாறு அரக்கு முத்திரை வைக்கப்பட்ட ஆடுகளை மட்டுமே அறுவை கூடத்திற்குள் அனுமதிப்பார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் சில நிமிடங்கள் தாமதமாக போனால்கூட, கசாப்பு கடைக்காரர்கள் அதை பெரிது படுத்திவிடுவார்கள். காரணம் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும்.

அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் கால்நடை மருத்துவர், வீடுகளுக்கு சென்று வைத்தியம் செய்வது என்பது அவர்கள் சொந்த விருப்பை பொருத்தது. அது சட்டப்படி அவர்களின் கடமை அல்ல. ஆகையால் மருத்துவ
பணி நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியே சென்று வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவமனை பணி நேரம் தவிர, பிற நேரங்களில் கால்நடை மருத்துவர் எங்கு வேண்டுமானாலும் சென்று வைத்தியம் செய்யலாம். அதற்காக அவர் கேட்கும் கட்டணத்தை கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவருக்கு கொடுக்க வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளில் கூட முற்றிலும் இலவச சேவை கிடையாது. மாதம் 100ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சேவை. அவர்கள் கூட சினை பார்க்க 50 பைசா கட்ட வேண்டும். மற்றவர்களுக்கு கட்டண சேவைதான்.

கன்று போட முடியாமல் தவிக்கும் பிராணிகளுக்கு வைத்தியம் செய்யும்போது யாரலும் எவ்வளவு நேரத்திறககுள செய்து முடிக்க முடியும் என்று கூறமுடியது. ஆகையால், காலை 6 மணிக்குள் வைத்தியம் செய்து திரும்பி வேலைக்கு திரும்பமுடியுமா என்று யோசித்தேன். இது போன்ற காரணங்களால்தான் நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தொலை தூரத்தில் உள்ள கிராமத்துக்கு வைத்தியம் செய்ய செல்வதற்கு தயங்கினேன்.
.

No comments:

Post a Comment